மால்டாவில் நடந்தது மக்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்... மமதா
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், மால்டாவில் நடந்த வன்முறையானது, மக்களுக்கும், எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதல். இதில் மாநில அரசுக்குச் சம்பந்தம் இல்லை என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள நகரம்தான் மால்டா. மிகவும் சென்சிட்டிவானது. இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி இது. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரும் வன்முறை மூண்டது. உள்ளூர் காவல் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தால் மமதா அரசுக்கு பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து மமதா விளக்கம் அளித்துள்ளார்.

மதக் கலவரம் அல்ல
இதுகுறித்து அவர் இன்று கருத்து தெரிவிக்கையில் மால்டாவில் நடந்தது மதக் கலவரம் அல்ல. மத ரீதியான மோதலும் அல்ல. இது மக்களுக்கும், எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதலே ஆகும்.

மாநில அரசுக்குத் தொடர்பில்லை
இது மாநில அரசு தொடர்புடையதல்ல. இதில் மாநில அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை. இது முழுக்க முழுக்க மக்களுக்கும், எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்தான்.

என் கிட்ட கேட்காதீங்க
இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டிருக்கக் கூடாது. தவறான தகவலின் பேரில் என்னிடம் வந்து கேட்கிறீர்கள். இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கோ, எனது கட்சிக்கோ, போலீஸுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. தற்போது நிலைமை அமைதியாக உள்ளது என்றார் அவர்.

கருத்துக் கூற பி.எஸ்.எப் மறுப்பு
இந்த விவகாரம் தொடர்பாக எல்லைப் பாதுகாப்புப் படை இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. கருத்து தெரிவிக்கவும் அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

முஸ்லீம்கள் பேரணி
சம்பவ நாளின்போது கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் களியாச்சக் என்ற இடத்தில் பேரணி நடத்தினர். உ.பியைச் சேர்ந்த வலதுசாரி தலைவர் ஒருவரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து இந்தப் பேரணி நடந்தது.

நடுவில் சிக்கிக் கொண்ட "பி.எஸ்.எப்."
இந்த நிலையில் அந்த வழியாக வந்த எல்லைப் பாதுகாப்புப் படை வாகனம் ஒன்று பேரணியின் நடுவில் சிக்கிக் கொண்டது. அப்போது பேரணியில் வந்தவர்களுக்கும், வாகனத்தில் இருந்த படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது அப்படியே வன்முறையாக மாறி விட்டது.

போலீஸ் நிலையம் தீவைத்து எரிப்பு
அப்பகுதியில் இருந்த போலீ்ஸ் நிலையத்தை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறி வைத்தனர். அந்தக் காவல் நிலையம் முழுமையாக தீவைத்து எரிக்கப்பட்டது. குறிப்பாக அங்கிருந்த முக்கியமான கோப்புகளை தீவைத்து எரித்து விட்டனர். பல வாகனங்களும் தீவைத்து எரிக்கப்பட்டன. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் குண்டுக் காயமடைந்தார்.

ஏன் இந்த வன்முறை?
இந்த வன்முறை திடீரென வெடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. இந்தத் திடீர் வன்முறைக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.

போலீஸ் நிலையத்தைக் குறி வைத்தது ஏன்?
களியாச்சக் காவல் நிலையத்தைத்தான் தாக்குதல் நடத்தியவர்கள் அதிகம் குறி வைத்தனர். அந்தக் காவல் நிலையத்தில் இருந்த முக்கிய ஆவணங்களை அவர்கள் சூறையாடி தீவைத்து எரித்தனர்.

கள்ளநோட்டுக்களின் தலைநகரம்
மால்டா, வங்கதேச நாட்டுக்கு எல்லைப் பகுதியில் உள்ளது. பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் வழியாகத்தான் கள்ள நோட்டுக்கள் இந்தியாவுக்குள் நுழைகின்றன. மால்டா வழியாகவே இவை இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணப்படுகின்றன. இந்தியாவுக்குள் பாகிஸ்தான் அனுப்பும் கள்ள நோட்டுக்களில் 90 சதவீதம் மால்டா வழியாகத்தான் வருகின்றன என்று உளவுத்துறை கூறுகிறது.

பாஜகவின் குற்றச்சாட்டு
இந்த நிலையில்தான் இங்கு பெரும் வன்முறை மூண்டு காவல் நிலையம் குறி வைத்துத் தாக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணமானவர்களைக் காக்க மமதா பானர்ஜி அரசு முயல்தாக பாஜக குற்றம் சாட்டுள்ளது. அதேசமயம், இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று மமதா இன்று கூறி விட்டார்.












Click it and Unblock the Notifications