''மாட்டிறைச்சி சாப்பிடுவோரின் டி.என்.ஏ. வேறாக இருக்கும்''.. வி.எச்.பி. பெண் தலைவர் சர்ச்சை பேச்சு!
ஜெய்ப்பூர்: மாட்டிறைச்சி சாப்பிடுவோரின் டி.என்.ஏ. வேறாக இருக்கும் என்று விசுவ இந்து பரிசத் பெண் தலைவர் சாத்வி பிராச்சி சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார்.
இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமையும் பறிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இவர்களின் டி.என்.ஏ. வேறு
ராஜஸ்தானில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வி.எச்.பி.,யைச் சேர்ந்த சாத்வி பிராச்சி கூறியதாவது:- மோகன் பாகவத் கூறியதுபோல், இந்தியர்கள் அனைவரின் மரபணுவும் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால், மாட்டிறைச்சி சாப்பிடுவோரின் மரபணு, நிச்சயம் ஹிந்துக்களிடம் இருப்பதுபோல் இருக்காது. அவர்களின் டி.என்.ஏ. வேறு வகையாகும்.

வாக்களிக்கும் உரிமையை பறிக்கணும்
மக்கள் தொகையை கட்டுப்படுத்த இரண்டு குழந்தைக்கு மேல் பெற்றெடுப்போருக்கு, அரசின் சலுகைகளை நிறுத்த வேண்டும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு வசதிகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அதே போல் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையும் பறிக்கப்பட வேண்டும்.

லவ் ஜிஹாத் பிரச்சினை
ஒருவருக்கு எத்தனை மனைவிகள் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் இரண்டு குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும் .ராஜஸ்தானில் ஹிந்து பெண்களை காதலித்து, கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்யும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் முதல்வர் அசோக் கெலாட் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. லவ் ஜிஹாத்' பிரச்சினையில் ராஜஸ்தான் அரசு தலையிட்டு பிரச்சினையை முடித்து வைக்க வேண்டும் என்று சாத்வி பிராச்சி தெரிவித்தார்.

மோகன் பகவத் கூறியது என்ன?
கடந்த வாரம் காஜியாபாத்தில் முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ' அனைத்து இந்தியர்களின் டி.என்.ஏவும் ஒன்றே. முஸ்லிம்களை நாட்டை விட்டு வெளியேறச் சொல்வோர் தங்களை இந்துக்கள் என்று அழைக்க முடியாது. இந்தியாவில் இஸ்லாம் ஆபத்தில் உள்ளது என்ற அச்சத்தின் சுழற்சியில் முஸ்லிம்கள் சிக்கிக்கொள்ள வேண்டாம்' என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications