டிரம்ப் தொடங்கி வைரமுத்து வரை.. ''மீடூ #MeToo'' ஹேஷ்டேக் உருவாக்கும் புயல்.. என்ன நடக்கிறது!?
இந்தியா முழுக்க ''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லி: இந்தியா முழுக்க ''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
உலகம் முழுக்க ஒரு ஹேஸ்டேக் பல புயல்களை, பல குற்றச்சாட்டுகளை, பல தீர்வுகளை, பல சர்ச்சைகளை சுமந்து வலம் வருகிறது என்றால் அது ''மீடூ #MeToo'' ஹேஷ்டேக் என்று எளிதாக சொல்லிவிடலாம். இந்த ஹேஸ்டேக்கில் சென்று 10 நிமிடம் படித்தாலே பல அதிர்ச்சிகரமான தகவல்கள் நமக்கு கிடைக்கும்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று சுற்றிய இந்த ஹேஷ்டேக் தற்போது தமிழகத்திற்கும் வந்துள்ளது. தமிழகத்தில் இந்த ஹேஷ்டேக் ஏற்படுத்த போகும் புயலுக்கான பிள்ளையார் சுழி இப்போதே போடப்பட்டுவிட்டது,
யார் தொடங்கியது
''மீடூ #MeToo'' என்பது ஹேஸ்டேக்காக உருவாவதற்கு முன்பே ஒரு இயக்கமாக உருவாகிவிட்டது. ஆஃப்ரோ - அமெரிக்க இனத்தை சேர்ந்த தரானா புர்க் என்ற சமூக செயற்பாட்டாளர் இந்த இயக்கத்தை 2006ல் தொடங்கினார். ஆம் 2006ல். பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குற்றங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர இந்த இயக்கம் உருவாக்கப்பட்டது.
எப்போது வைரல்
ஆனால் இந்த ''மீடூ #MeToo'' வைரல் ஆனது 2017 அக்டோபரில்தான். அப்போது, ஹாலிவுட் சினிமா தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டேய்ன் மீது 80க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் வைத்தனர். இதையடுத்து ஹாலிவுட் நடிகை அலிசா மிலானோ ''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக்கிற்கு 11 வருடத்திற்கு பின் உயிர் கொடுத்து தனக்கு தெரிந்த பெண்கள் அனுபவித்த பாலியல் தொல்லைகளை எழுதினார். இதுதான் இந்த டேக் வைரலாக தொடக்கம். சென்ற வருடம் அக்டோபர் 15ம் தேதி இந்த போஸ்ட் போடப்பட்டது.
அமெரிக்கா முழுக்க
அதன்பின் அமெரிக்கா முழுக்க இந்த ஹேஷ்டேக் வைரலானது. முக்கியமாக ஹாலிவுட் பிரபலங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் நிறைய வைக்கப்பட்டது. அது அப்படியே வெள்ளை மாளிகை நோக்கியும் திரும்பியது. அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கி சில வெள்ளை மாளிகை அதிகாரிகள் வரை இந்த புகார்கள் நீண்டது. ஆஸ்கர் விழா, கோல்டன் குளோப் விழாவில் ''மீடூ #MeToo'' பற்றி பேசப்பட்டது.
இந்தியாவும் வந்தது
இந்த ''மீடூ #MeToo'' ஹேஷ்டேக் 2017ல் வைரலாக இருந்த போதே, இந்தியாவில் சிலர் இதை பற்றி பேசினார்கள். ஆனால் பெரிய அளவில் வைரலாகவில்லை. சிலநாள் முன் ஹிந்தி நடிகை தனுஷ்ஸ்ரீ தத்தா (தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்த நடிகை), இயக்குனர் நானா படேகர் (காலா பட வில்லன்) தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுதினார். இதையடுத்து தற்போது இந்தியாவில் இணையம் முழுக்க பலர் தாங்கள் அனுபவித்த பாலியல் தொல்லைகள் குறித்து எழுதி வருகிறார்கள்.
தற்போது தமிழகம்
இதனால் சினிமா மட்டுமில்லாமல் பாஜக எம்பி, சில செய்தி நிறுவனங்கள், பல சினிமா நடிகர்கள், இயக்குனர்கள் என்று பலர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. தமிழகத்தில் பாடகி சின்மயி தீவிரமாக இந்த டேக்கின் கீழ் புகார்களை எழுதி வருகிறார். பாடலாசிரியர் வைரமுத்து மீதும் குற்றச்சாட்டு வைத்துள்ளார். வைரமுத்து அதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தார்.
இரண்டு வேறான கருத்துக்கள்
இந்த ஹேஷ்டேக் மூலம் பெண்கள் வெளிப்படையாக தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சொல்கிறார்கள். பாலியல் தொல்லை கொடுப்பவர்கள், பயப்படும் அளவிற்கு வெளிப்படையாக துணிந்து எழுதுகிறார்கள். அமெரிக்காவில் சில பொய்யான ''மீடூ #MeToo'' குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.