திருவள்ளூர் மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கோரி உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்
திருவள்ளூரில் உயிரிழந்த பள்ளி மாணவியின் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், முறையான காரணம் தெரிவிக்கப்படவில்லை என்று கூறி 'உடலை வாங்க மாட்டோம் என்று மாணவியின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
என்ன நடந்தது?
திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு காவல் எல்லைக்கு உட்பட்ட கீழச்சேரி பகுதியில் இயங்கும் தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி விடுதியில் தங்கி பயின்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (ஜூலை 26) காலை மாணவி சடலமாக மீட்கப்பட்டார்.
மாணவியின் உடலை கைப்பற்றிய போலீசார் திருவள்ளூர் மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மப்பேடு காவல் துறையினர் இதனை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.
இதனிடையே காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா, திருவள்ளூர் எஸ்பி கல்யாண் உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் பள்ளி மற்றும் விடுதியில் ஆய்வு செய்தனர். அவர்களுடன், தடயவியல் வல்லுநர் குழுவும் ஆய்வு செய்தது. பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
திருவள்ளூர் சிபிசிஐடி ஆய்வாளர் திரிபுரசுந்தரி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் இருந்து சிபிசிஐடி அதிகாரிகள் நேரில் வந்து பள்ளி மற்றும் விடுதியில் மாணவி உயிரிழந்த இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும், பள்ளி விடுதி காப்பாளர்களிடம் மாணவியின் ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களிடமும் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அதிவிரைவு படை போலீசார் மருத்துவமனை வளாகம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், "மாணவி எப்படி உயிரிழந்தார் என்று முறையாக தெரிவிக்காத வரை நாங்கள் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம்" என மாணவியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
'உடலை பெறமாட்டோம்'
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவியின் உறவினர் ஒருவர், "மாணவி உயிரிழப்பதற்கு முன்பு இரவு 9 மணிக்கு அவர் பெற்றோருடன் தொலைபேசியில் நல்லபடியாக பேசினார். ஆனால் காலை மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார்கள். எப்படி? எதனால்?
'எதற்காக தற்கொலை செய்து கொண்டார்?' என்பது குறித்து தற்போது வரை முறையாக யாரும் தெரிவிக்கவில்லை. விசாரணை முன்னேற்றத்தை முறையாக தெரிவிக்காவிட்டால் மாணவியின் உடலை நாங்கள் வாங்கிக் கொள்ள மாட்டோம்" என்றார்.
தகவல் அறிந்து பெற்றோர் பள்ளி வளாகத்திற்கு வருவதற்கு முன்பே, மாணவியின் சடலத்தை எதற்காக அப்புறப்படுத்தினார்கள். மாணவியின் உடல் தரையில் வைக்கப்பட்டிருந்தது. மாணவி உயிரிழந்த நிலையில் ஒரு வீடியோ காட்சி மட்டும்தான் காண்பித்தார்கள். இது எங்களுக்கு மேலும் சந்தேகத்தை எழுப்புகிறது.
மேலும் மாணவிக்கு உடல் ரீதியான பாதிப்பு இருந்த காரணத்தினால் தான் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது மாதிரி எந்த விதமான பாதிப்பும் மாணவிக்கு கிடையாது. மாணவி எப்படி உயிரிழந்தார் என்று முறையாக தெரிவிக்காத வரை நாங்கள் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம்" என்றார்.
வெளிப்படையான விசாரணை
இந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை நடத்தபட்டு உண்மை வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரி உறவினர்கள் தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே பள்ளி மற்றும் விடுதியில் ஆய்வு செய்த திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், "இந்த வழக்கு விசாரணை வெளிப்படை தன்மையாக நடந்து வருவதாகவும், தம்முடைய கவனத்திற்கு வந்தவுடன் இந்த வழக்கில் துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வருகிறது" என்றும் தெரிவித்தார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்















Click it and Unblock the Notifications