ஏமனில் இருந்து இந்தியா வந்த விமானத்தில் இன்குபேட்டரில் பயணித்த பிறந்து 7 நாளே ஆன பார்வதி
கொச்சி: ஏமனில் இருந்து பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தை மீட்கப்பட்டு விமானத்தில் இன்குபேட்டரில் வைத்து இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளது.
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனில் இருந்து 4 ஆயிரத்து 600 இந்தியர்களை மத்திய அரசு மீட்டுள்ளது. ஏமனில் வசித்து வந்த ராஜி என்பவர் குறைமாதத்தில் பார்வதி என்ற பெண் குழந்தையை பெற்றார்.

இந்நிலையில் குழந்தையுடன் ராஜி ஏமனில் உள்ள சனா நகரில் இந்தியர்கள் மீட்கப்படும் இடத்திற்கு வந்தார். அவர்கள் விமானம் மூலம் அண்டை நாடான ஜிபோட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குழந்தைக்கு மஞ்சள்காமாலை, மூச்சு திணறல் பிரச்சனை இருப்பது தெரிந்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் குழந்தையை இன்குபேட்டரில் வைத்தனர். பின்னர் குழந்தையை இன்குபேட்டருடன் இந்தியாவுக்கு கிளம்பிய விமானத்தில் டாக்டர் உமா நம்பியார் என்பவர் துணையுடன் அனுப்பி வைத்தனர்.
குழந்தை வந்த விமானம் கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. குழந்தைக்கு கொச்சியில் உள்ள அம்ரிதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயன்சஸில் சிகிச்சை அளிக்க கேரள அரசு வழிவகை செய்து கொடுத்தது.
ராஜியின் கணவர் ஏமனில் இருந்து கப்பலில் மீட்கப்பட்டு ஜிபோட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் இந்தியா அழைத்து வரப்பட்டார்.












Click it and Unblock the Notifications