அரசியல் பழிவாங்கலில் மோடியும், அமித்ஷாவும் இறங்கியுள்ளனர்... மமதா அதிரடி குற்றச்சாட்டு
கொல்கத்தா:மேற்கு வங்காளத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் மோடியும், அமித் ஷாவும் ஈடுபட்டுள்ளனர் என்று அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அந்த மோசடி வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சிபிஐ அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்க வில்லை. இதுகுறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, கமிஷனர் வீட்டிற்கு வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவை கைது செய்து போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கமிஷனர் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் வந்ததை தொடர்ந்து, மாநில டிஜிபி, முதல்வர் மமதா பானர்ஜி மற்றும் மேயர் ஆகியோர் கமிஷனர் ராஜிவ் சுக்லா வீட்டுக்கு சென்று ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் மோடியும், அமித் ஷாவும் ஈடுபட்டுள்ளனர் என்று மமதா பானர்ஜி தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் கூறுகையில், பிரதமர் மோடியின் அரசு மேற்கு வங்கத்தில் அராஜகத்தை பரப்புகிறது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் பிரதமரும் அமித்ஷாவும் ஈடுபட்டுள்ளனர்.
நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டு உள்ளது. உலகத்திலேயே சிறந்த போலீஸ் அதிகாரியாக செயல் பட்டு வருபவர் ராஜிவ் சுக்லா என்று தெரிவித்துள்ளார்.