'இந்து தீவிரவாதம்' என்போர் தேச விரோதிகள்... மன்னிப்பே கிடையாது! - உபி முதல்வர் அதிரடி
Recommended Video
லக்னோ: இந்து தீவிரவாதம் என்று பேசி தங்கள் அறிவுஜீவித்தனத்தை பணம் பண்ண நினைப்பவர்கள் தேச விரோதிகள். அந்நிய நாட்டு கைக்கூலிகள், அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது என உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.
இந்து வலதுசாரிகளில் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என நடிகர் கமல் ஹாஸன் ஒரு கட்டுரையில் எழுதியுள்ளது மதச் சார்புடைய தலைவர்கள், பிரமுகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கமல் ஹாஸனுக்கு எதிராக அவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
வாரணாசி, லக்னோ, சென்னை நீதிமன்றங்களில், கமிஷனர் அலுவலகங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன, புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கமல் ஹாஸன் கருத்துக்களுக்கு அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார்.
தேச விரோதிகள்
லக்னோவில் அவர் பேசுகையில், "பிரபலங்கள் என்ற பெயரில் இந்து தீவிரவாதம் என்றெல்லாம் பேசுபவர்கள் தேச விரோதிகள். நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை என்றெல்லாம் கூறி தங்கள் அறிவுஜீவித்தனத்தை வைத்து பணம் பண்ணுபவர்கள். இவர்கள் இந்து தீவிரவாதம் பேசி தங்கள் பிழைப்பை நடத்தும் அந்நிய நாட்டுக் கைக் கூலிகள்.
சனாதன தர்மம்
இந்த நாட்டின் மக்கள் ஒருபோதும் இவர்களை மன்னிக்க மாட்டார்கள்.
சனாதன தர்மம்தான் இந்த நாட்டின் ஒரே மதம். மற்றவை எல்லாம் வெவ்வேறு கலாச்சாரம், நம்பிக்கையின் தொடர்ச்சி.
மதச்சார்பின்மை என்ற ஒன்றே இந்த நாட்டில் கிடையாது. இந்த சுதந்திர இந்தியாவில் மிகப் பெரிய பொய் அது.
தேசம் பெரிது
அவரவர் மதம், கலாச்சாரத்தைப் பின்பற்றும் உரிமை அனைவருக்கும் உள்ளது. ஆனால் இதையெல்லாம் விட தேசம் பெரியது. இந்து தீவிரவாதம், மதச் சார்பின்மை என்று கூறி, தன்னை பெரிய ஆளாகக் காட்டிக் கொள்ள, இந்த நாட்டுக்கு துரோகம் செய்ய அனுமதிக்க முடியாது.
இந்துத்துவம் என்பது ஒரு கலாச்சாரம், வாழ்க்கை நெறிமுறை. இந்த இந்து நாடுதான் முஸ்லிம்கள், ஜொராஷ்டிரர்கள், கிறித்துவர்கள், யூதர்கள் மற்றும் பல மதத்தவர்களுக்கு வாழ இடமளித்திருக்கிறது.
அனுமதிக்க முடியாது
சகிப்புத்தன்மையை உலகுக்குத் தந்தது இந்தியா. அனைத்து மதங்களையும் நாம் மதிக்கிறோம். ஆனால் அதற்காக யார் வேண்டுமானாலும் இந்து தீவிரவாதம் என பேச அனுமதிக்க முடியாது. ஒருவரின் மத நம்பிக்கைகளை இன்னொருவர் மீது திணிக்க முடியாது. பூணூல் அணியாவிட்டாலும் குடுமி இல்லாவிட்டாலும் ஒரு பிராமணர் பிராமணர்தான்," என்றார்.