பெங்களூரில் இடி மின்னலுடன் கூடிய பேய் மழை: சென்னைக்கு திருப்பிவிடப்பட்ட 4 விமானங்கள்
பெங்களூர்: பெங்களூரில் வியாழக்கிழமை மாலை இடியுடன் கூடிய கன மழை பெய்ததால் 4 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன.
பெங்களூரில் கோடை காலத்தில் அவ்வப்போது இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு மேல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. சிறிது நேரத்தில் மேகம் கூடி பலத்த காற்று வீசியது.
காற்று சுழற்றி சுழற்றி அடித்து முடித்த வேகத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. மாலை 4 மணி அளவில் பெய்யத் துவங்கிய மழை இரவு 8.30 மணி வரை கொட்டித் தீர்த்தது. இதனால் பெங்களூர் வந்த 4 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன.
பலத்த காற்று வீசியதால் பெங்களூரின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஒரு இடத்தில் மரம் பெயர்ந்து சாலையில் சென்ற கார் மீது விழுந்தது. ஏற்கனவே போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போன பெங்களூரில் மழையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மழை துவங்கியதும் சாலையோரம் உள்ள இடங்களில் ஒதுங்கிய இரு சக்கர வாகன ஓட்டிகள் சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக கால் வலிக்க நின்று கொண்டிருந்தனர். மழை இப்போது நின்றுவிடும், அப்போது நின்றுவிடும் என்று நினைத்து மணிக்கணக்கில் சாலையோரம் நின்றனர்.