"Nation wants to know"... இந்த வார்த்தையை அர்னாப் பயன்படுத்தக் கூடாதாம்.. டைம்ஸ் நவ் நோட்டீஸ்!
தான் உருவாக்கிய, மிகவும் பிரபலமான "Nation wants to know" என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என அர்னாப் கோஸ்வாமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாம் டைம்ஸ் குழுமம்.
டெல்லி: அர்னாப் கோஸ்வாமியால் தொடங்கப்படவுள்ள ரிபப்ளிக் டிவியில் "நாடு உண்மையை அறிய விரும்புகிறது" என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று டைம்ஸ் மீடியா நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாம்.
"நாடு உண்மையை அறிய விரும்புகிறது" என்ற வார்த்தையை கேட்டாலே நம் அனைவரின் நினைவுக்கு வருபவர் அர்னாப் கோஸ்வாமி. காரணம் அவர் உபயோகித்த பிரபலமான வார்த்தை இது.
முன்பு அவர் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி குழுமத்தில் பணியாற்றினார். பின்னர், தான் தொடங்கவுள்ள ரிபப்ளிக் டிவி சேனலை நிர்வகிப்பதற்காக டைம்ஸ் நவ்வில் இருந்து கடந்த நவம்பர் 1-ஆம் தேதி ராஜினாமா செய்துவிட்டார்.
பயன்படுத்தக் கூடாது
இந்நிலையில் அவர் தொடங்கவுள்ள டிவி சேனலில் டைம்ஸ் நவ் சேனலில் பயன்படுத்திய பிரபல சொற்றொடரான "நாடு உண்மையை அறிய விரும்புகிறது" என்ற பதத்தைப் பயன்படுத்த டைம்ஸ் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாம். அதற்கு காப்புரிமை வாங்கியுள்ளதால் அதை அர்னாப் பயன்படுத்தக் கூடாது என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
6 பக்க வக்கீல் நோட்டீஸ்
சுமார் 6 பக்கங்கள் கொண்ட நோட்டீஸில் அவர் அந்த சொற்றொடரை பயன்படுத்தினால் சிறை செல்வார் என்று அச்சுறுத்தப்பட்டுள்ளதாம். இதுகுறித்து ஒரு ஆடியோ செய்தியை அர்னாப் வெளியிட்டுள்ளார். அதில் அவர் டைம்ஸ் பெயரைச் சொல்லாமல், தன்னை அவர்கள் மிரட்டுவதாக கூறியுள்ளார்.
கோபத்தில் அர்னாப்
அதில் அவர் கூறுகைில், பிரபல மீடியா எனக்கு விடுத்த மிரட்டலை பகிரங்கப்படுத்த முடிவு செய்தேன். "நாடு உண்மையை அறிய விரும்புகிறது" என்ற வார்த்தையை பயன்படுத்துவேன். இந்த தொடரானது அனைவருக்கும் சொந்தமானது. அதை நான் நடத்திய அனைத்து விவாதங்களிலும், செய்தி பதிவுகளின்போதும் பயன்படுத்தியுள்ளேன்.
மிரட்ட முடியாது
சிறை தண்டனை மிரட்டல் கொடுத்து என்னை ஒடுக்க முடியாது. உங்களிடம் உள்ள பணத்தையும், வழக்கறிஞர்களையும் கொண்டு குற்றவியல் வழக்கு பதிவு செய்யுங்கள். என் ரிபப்ளிக் டிவி ஸ்டுடியோவிலேயே காத்திருக்கிறேன். நீங்கள் விடுத்த மிரட்டலை செயல்படுத்துங்கள்" என்று அவர் கூறியுள்ளார்.