திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் 25ல் ஆழ்வார் திருமஞ்சனம்
தெலுங்கு வருட பிறப்பையொட்டி வருகிற 31ம் தேதி ஜெயநாம வருடம் பிறக்கிறது. அன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உகாதி ஆஸ்தானம் நடைபெற உள்ளது.
இதையொட்டி ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. கோவிலை வாசனை திரவியங்கள் கொண்டு சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியே ஆழ்வார் திருமஞ்சனம் ஆகும்.
மார்ச் 25ம் தேதி காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை இந்த கோவில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் கோவிலின் மூலவர் சன்னிதி, தங்கவாசல், வகுலமாதே சன்னிதி, லட்சுமி நரசிம்ம சாமி சன்னிதி, வரதராஜசுவாமி சன்னிதி உள்பட கோவிலின் அனைத்து சன்னிதிகளும் சுகந்த திரவியங்கள் மூலம் சுத்தப்படுத்தப்படும். அப்போது மூலவர் ஏழுமலையான் விலை உயர்ந்தபட்டு வஸ்திரத்தால் மூடப்பட்டு இருக்கும்.
இந்த கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி அன்று காலையில் ஏழுமலையானுக்கு நடைபெறும் அஷ்டலபாத பத்மாராதனை சேவை ரத்து செய்யப்படும்.
நண்பகல் 12 மணிக்கு பின்னர் நைவேத்தியம் முடிந்ததும் கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கம்போல் பிரத்யேக தரிசனம், சிறப்பு தரிசனம், இலவச தரிசனம் போன்றவற்றிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இந்த கோவில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சியில் கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர்.
திருப்பதி கோவிலில் உகாதி ஆஸ்தானம், ஆனி வார ஆஸ்தானம், பிரம்மோற்வம், வைகுண்ட ஏகாதசி என வருடத்தில் 4 முறை மட்டுமே ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.