திருப்பதியில் பிரம்மோற்சவம் தொடங்கியது: ரயில் நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பதற்றம்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தைக் காண ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வந்த வண்ணம் உள்ளனர். திருப்பதி ரயில் நிலையத்தில் 8 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவம் மற்றும் 3ஆண்டுக்கு ஒருமுறை நவராத்திரி பிரம்மோற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டு வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த செப்டம்பர் 16ம் தேதி தொடங்கி 24ம் தேதியுடன் நிறைவடைந்ததது.
நவராத்திரி பிரம்மோற்சவம் நேற்று தொடங்கி வரும் 22ம் தேதி வரை நடைபெறுகிறது.இதையொட்டி நேற்று இரவு அங்குரார்ப்பணம் நடைபெற்றது. இதில் விஸ்வ சேனாதிபதி, கோயிலில் இருந்து மேற்கு திசையில் உள்ள வசந்த மண்டபத்திற்கு ஊர்வலமாக சென்றார். அங்கு அர்ச்சகர்கள் ஆகம முறைப்படி புற்று மண்ணை சேகரித்து அதை விஷ்வ சேனாதிபதியுடன் மீண்டும் கோயிலுக்கு கொண்டுவந்தனர். பின்னர், 9 பானைகளில் புற்று மண் சேகரிக்கப்பட்டு நவதானியங்களுடன் சிறப்பு பூஜைகள் செய்தனர். இதில் கோயில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் பலர்கலந்துகொண்டனர்.
பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று கருட கொடியேற்றப்பட்டது. இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஏழுமலையான் ஸ்ரீதேவி பூதேவியருடன் மாட வீதிகளில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை (வியாழக்கிழமை) காலை சின்னசேஷ வாகன வீதிஉலா, இரவு அம்ச வாகன வீதிஉலா நடைபெறும்.
16ம் தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, 17ம் தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா,18ம் தேதி காலை மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன வீதிஉலா, இரவு 8 மணியில் இருந்து நள்ளிரவு 1 மணிவரை கருட வாகன சேவை நடைபெறும்.
19ம்தேதி காலை அனுமந்த வாகன வீதிஉலா, இரவு யானை வாகன வீதிஉலா, 20ம்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு 9 மணியில் இருந்து 10.30 மணிவரை சந்திர பிரபை வாகன வீதிஉலா. 21ம்தேதி காலை 7 மணியளவில் தங்கத் தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா. 22ம்தேதி அதிகாலை 3 மணியில் இருந்து 6 மணிவரை பல்லக்கு உற்சவமும், காலை 6 மணியில் இருந்து 9 மணிவரை ஸ்நாபன திருமஞ்சனமும் நடக்கிறது. பின்னர் இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை தங்கத் திருச்சி வாகன வீதிஉலா நடக்கிறது. அத்துடன் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. பிரம்மோற்சவத்தை காண ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டல்
திருப்பதி ரயில் நிலையத்தில் 8 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 50க்கும் மேற்பட்ட ரயில்வே போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் ரயில் நிலையம் முழுவதையும் மோப்ப நாய்களுடன் சோதனை மேற்கொண்டனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் போனில் பேசிய மர்மநபர் யார்? எங்கு இருந்து பேசினார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நவராத்திரி பிரமோற்சவ விழாவை சீர்குலைக்க சதி திட்டம் ஏதும் தீட்டப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.