அரசு நிர்வகித்தால் இப்படிதான்..கோயில்களை பக்தர்களிடம் கொடுங்க..திருப்பதி பிரச்னையில் ஜக்கி கருத்து
விஜயவாடா: திருப்பதியில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் மாடு, பன்றி உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், கோயில்களில் அரசு நிர்வாகம் செய்தால் இப்படி தான் இருக்கும் என்றும், பக்தர்களால் நடத்தப்பட வேண்டும் என்றும் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளைத் தயாரிக்க மாடு, பன்றி, மீன் உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு கூறியுள்ளது ஆந்திர அரசியலில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டனர். திருப்பதி லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி அசுத்தப்படுத்திவிட்டனர் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு வைத்தார்.

இந்தக் குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மறுத்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புனிதம் மற்றும் பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையை சந்திரபாபு நாயுடு காயப்படுத்தி உள்ளார். சந்திரபாபு அரசியலுக்காக எந்த மோசமான செயலையும் செய்யத் தயங்கமாட்டார் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்பா ரெட்டி கூறியிருந்தார்.
இதற்கிடையே, குஜராத்தில் உள்ள தனியார் ஆய்வகம் ஒன்றுக்கு திருப்பதி ஏழுமைலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யை சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சோதனையில், லட்டில் மாட்டுக் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் உள்ளிட்டவை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இந்நிலையில், திருப்பதி கோயில் பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு பயன்படுத்தப்பட்டிருப்பது மிகவும் அருவருப்பான விஷயம். அதனால்தான் கோயில்கள் அரசால் நடத்தப்படாமல் பக்தர்களால் நடத்தப்பட வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், கோயில் பிரசாதத்தில் மாட்டிறைச்சியை பக்தர்கள் சாப்பிடுவது மிகவும் அருவருப்பானது. அதனால்தான் கோயில்கள் அரசால் நடத்தப்படாமல் பக்தர்களால் நடத்தப்பட வேண்டும் என்கிறோம். பக்தி இல்லாத இடத்தில் புனிதம் இருக்காது. இந்து கோயில்களை பக்தியுள்ள இந்துக்களால் நடத்தப்படும் நேரம் இது. அரசு நிர்வாகத்தால் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
லட்டு விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், திருப்பதி பிரசாதமான லட்டு மற்றும் நெய்யின் தரத்தில் இனி எந்தவிதமான சமரசமும் இருக்காது என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்துள்ளார். ஆனாலும், கடவுளுக்குப் படைக்கும் பிரசாதம் மற்றும் மற்ற உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யின் விநியோகம் சனிக்கிழமை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இனிமேல் திருப்பதி லட்டு பிரசாதத்தில் கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தின் நந்தினி நெய்யை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, திருப்பதி கோயிலில் பிரம்மோற்சவம் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை ஒன்பது நாள்கள் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாகவே நெய் சேமித்து வைக்கும் பணியில் திருப்பதி தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.











Click it and Unblock the Notifications