திருப்பதி வெங்கடாஜலபதிக்கு வங்கிக் கணக்கு தொடக்கம்.. இனி காணிக்கையாக பங்குப் பத்திரங்களும்...
திருப்பதி : நாட்டிலேயே முதன்முறையாக கடவுள் பெயரில் வங்கிக்கணக்கு வெங்கடாஜலபதி பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. இனி பங்குப் பத்திரங்களும் ஏழுமலையானுக்கு காணிக்கையாக கொடுக்கலாம்.
இந்தியா மட்டுமல்லாது உலகத்திலேயே மிகவும் பணக்கார கடவுள் என்று போற்றப்படுபவர் திருப்பதி திருமலை வெங்கடாஜலபதி. உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். விசேஷ நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை லட்சங்களை கடக்கும்.
அவ்வாறு தரிசனம் செய்யும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி நகைகள் ஆகியவற்றை நேர்த்திக்கடனாக உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பணம், தங்கம், வெள்ளி நகைகள் மட்டுமல்லாது பங்குப் பத்திரங்களையும் நன்கொடையாக பக்தர்கள் செலுத்தும் வகையில் திருப்பதி வெங்கடாஜலபதி பெயரில் புதிய வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
பங்குகளை நன்கொடை செலுத்த ஏதுவாக தேவஸ்தானம் தொடங்கியுள்ள "டிமேட்" வங்கிக் கணக்கு எண்ணையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி பங்குகளை நன்கொடை செலுத்தும் பக்தர்கள் திருப்பதி வெங்கடாஜலபதி பெயரில் தொடங்கப்பட்டுள்ள 1601010000384828 எண்ணின் டிமேட் கணக்கில் ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.