சாரதா சிட்பண்ட் ஊழல்: மே.வங்க முன்னாள் அமைச்சர் மதன் மித்ராவின் ஜாமீன் ரத்து- கோர்ட்டில் சரண்!!
கொல்கத்தா: சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் மதன் மித்ராவுக்கு கீழ்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீனை கொல்கத்தா உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான அரசியல் போக்குவரத்து மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் மதன் மித்ரா. அம்மாநிலத்தை உலுக்கிய சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மதன் மித்ராவை சி.பி.ஐ. கைது செய்து சிறையில் அடைத்தது.

பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பொதுமக்கள் பணத்தை வசூலித்துவிட்டு அதை திருப்பித் தராமல் ஏமாற்றியதாக தொடரப்பட்டதுதான் சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கு.
இந்த வழக்கில் சிக்கியபோதே தமது அமைச்சர் பதவியை மதன் மித்ரா ராஜினாமா செய்தார். ஆனால் மமதா பானர்ஜி அதை ஏற்காமல் கிடப்பில் போட்டிருந்தார். பின்னர் இந்த வழக்கில் தமக்கு உடல்நலக் குறைவு என்பதை காரணம்காட்டி ஜாமீன் பெறுவதற்கு பகீரத பிரயத்தனம் மேற்கொண்டார்.
இதனடிப்படையில் கடந்த அக்டோபர் மாதம் கீழ்நீதிமன்றம் மதன் மித்ராவுக்கு ஜாமீன் அளித்தது. ஆனால் மதன் மித்ரா செல்வாக்கு மிக்க நபர்; சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் மிக முக்கியமான நபர்; இவரை வெளியில் விடக்கூடாது என கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது.
இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், மதன் மித்ராவுக்கு எதிரான கருத்துகளை நேற்று தெரிவித்தது. இதனால் அவர் மீண்டும் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனை முதல்வர் மமதா பானர்ஜியும் ஏற்றுக் கொண்டார்.
இன்றும் தொடர்ந்த விசாரணை முடிவில் மதன் மித்ராவின் ஜாமீனை கொல்கத்தா உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.












Click it and Unblock the Notifications