பீகாரைப் போல மே. வங்கத்தில் உதயமாகும் மெகா கூட்டணி.... சோனியாவுடன் 'கை' கோர்க்கிறார் மமதா!
டெல்லி: பீகாரில் பரம எதிரிகளாக இருந்த நிதிஷ்குமாரும் லாலுவும் கை கோர்த்து பா.ஜ.க.வை வீழ்த்தியதைப் போல மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸும், காங்கிரஸ் கட்சியும் கை கோர்க்க தொடங்கியுள்ளன.
பீகார் சட்டசபை தேர்தலில் கால் நூற்றாண்டுகாலம் அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த நிதிஷ்குமாரும் லாலு பிரசாத் யாதவும் பொது எதிரியான பா.ஜ.க.வை வீழ்த்த கை கோர்த்தனர்... கூட்டணி அமைத்தது; தொகுதிப் பங்கீடு, முதல்வர் வேட்பாளர் என அனைத்திலும் இருகட்சிகளும் இணக்கமாக நடந்து கொண்டன. இவர்களுடன் காங்கிரஸும் கரம் கோர்த்தது.
இதனால் பீகார் சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத பெருவெற்றியை இந்த மகா கூட்டணி அறுவடை செய்தது. இந்த கூட்டணி பார்முலா பல மாநிலங்களிலும் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் எதிரொலிக்கும் நிலையை தொடங்கி வைத்தது.

மே.வங்க நிலைமை
தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸும் காங்கிரஸ் கட்சியும் கை கோர்ப்பதற்கான சமிக்ஞைகள் வெளிப்பட்டு வருகின்றன. மேற்கு வங்க சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பாரதிய ஜனதா கட்சி வலுவான ஒன்றாக இல்லை. அதேநேரத்தில் இடதுசாரிகளே பிரதான எதிர்க்கட்சியாக உள்ளனர்.

ஒன்று சேர்க்கும் ஊழல் வழக்குகள்
காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி திரிணாமுல் காங்கிரஸை உருவாக்கி ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறார் மமதா... ஆனால் தற்போது காங்கிரஸும் திரிணாமுல் காங்கிரஸும் சாரதா சிட் பண்ட் ஊழல் வழக்கு, நேஷன் ஹெரால்டு வழக்கு போன்றவற்றால் மத்திய பா.ஜ.க. அரசால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் பா.ஜ.கவின் அரசியல் பழிவாங்கல்தான் என்று திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
அத்துடன் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி மீதான நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் காங்கிரஸை விட திரிணாமுல் காங்கிரஸே போர்க்கொடி தூக்கி வருகிறது... வெளிநடப்பு செய்து வருகிறது.. இரண்டு கட்சியினரும் கை கோர்த்து அதகளப்படுத்தி வருகின்றனர். அத்துடன் நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேரில் சென்று மமதா பானர்ஜி சந்தித்தும் பேசியுள்ளார்.இந்த சூழ்நிலைகள் அனைத்தும் மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் இந்த இரு கட்சிகளும் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடப் போகிறது என்பதற்கான முன்னோட்டங்கள் என்கின்றன டெல்லி அரசியல் வட்டாரங்கள்.

இடதுவேண்டாமே
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை இடதுசாரிகள், ஊழல் என்ற பிரச்சனையை முன்வைத்து தங்களை தொடர்ந்து விமர்சித்து வருவதால் அவர்களுடன் அணிசேருவதைவிட திரிணாமுல் காங்கிரஸுடன் கரம் கோர்க்கவே விரும்புகிறது. அதேபோல் இடதுசாரிகளும் இருக்கிற அத்தனை இடஒதுசாரி கட்சிகளையும் ஒருங்கிணைத்து மேற்கு வங்க தேர்தலில் களம் காண முனைப்பு காட்டுகிறது. ஆகையால் இயல்பாகவே இடதுசாரிகள் தனித்தும் காங்கிரஸ்- திரிணாமுல் கை கோர்க்கும் நிலைமையும் மேற்கு வங்கத்தில் உருவாகியுள்ளது என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.

மே.வ. காங்கிரசில் அதிருப்தி
இருப்பினும் மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியில் திரிணாமுல் காங்கிரஸுடன் கை கோர்க்க எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணியே சரியானதாக இருக்கும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் டெல்லி காங்கிரஸ் மேலிடத்தின் போக்கு திரிணாமுல் காங்கிரஸுடன் கரம் கோர்ப்பதாகவே இருக்கிறது என்பதே தற்போதைய நிலைமை.












Click it and Unblock the Notifications