"லூஸ்"ல போய் "கிங்ஸ்" கேட்டா இனிமே "கடைக்கார்" தர மாட்டார்!
டெல்லி: சிகரெட் விற்பனையில் கடும் கிடுக்கிப்பிடியைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக கடுமையான புகையிலை கொள்கையை மத்திய அரசு வகுக்கவுள்ளது.
இதுதொடர்பான செய்தி இன்று வெளியானதுமே புகையிலை நிறுவனங்களின் பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன.
இதுதொடர்பாக மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதில் சிகரெட்டின் சில்லறை விற்பனையைத் தடை செய்யக் கோரி முக்கியமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதாவது கடைகளில் இனிமேல் ஒரு சிகரெட், அரை பாக்கெட் சிகரெட் என்று வாங்க முடியாது. பாக்கெட் பாக்கெட்டாகத்தான் விற்கப் போகிறார்களாம்.
மேலும் புகை பிடிப்போருக்கு வயது நிர்ணயம் செய்யவும் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. மேலும், சிகரெட் விற்பனை மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் சட்டத்தை மீறும் வகையில் புகை பிடிப்போருக்கான அபராதத் தொகையை பெரிய அளவில் உயர்த்தவும் குழு பரிந்துரைத்துள்ளது.
இதுதொடர்பாக இன்று ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா பதிலளிக்கையில், நிபுணர் குழுவின் பரிந்துரைகளை அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதுதொடர்பான வரைவு அமைச்சரவைக் குறிப்பும் தயாரிக்கப்பட்டு ஆலோசனைக்காக சுற்றில் விடப்பட்டுள்ளது என்றார்.
இந்த பரிந்துரைகள் தற்போது அமைச்சரவை முன்பு வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்தப் பரிந்துரைகள் அமலாக்கப்படும்.
கடைகளில் தற்போது சில்லறையாக சிகரெட் வாங்குவதே அதிகம் உள்ளது. தற்போது 10 சிகரெட்கள் கொண்ட ஒரு பாக்கெட்டின் விலை ரூ. 100க்கு அதிகமாகத்தான் உள்ளது. இதனால் பலர் அரை பாக்கெட் அல்லது 2, 2 சிகரெட்டாக வாங்கி ஊதித் தள்ளுகிறார்கள். இதற்குத்தான் முதலில் ஆப்பு வைக்கப் போகிறது மத்திய அரசு.
இந்த உத்தரவுகள் சட்டமாகி அமலுக்கு வந்தால் சிகரெட் விற்பனையில் 10 முதல் 20 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்படும் என்று தெரிகிறது. சிகரெட் நிறுவனங்கள் மூலம் அரசுக்கு ரூ. 25,000 கோடி அளவுக்கு வரி வருவாய் கிடைக்கிறது. ஆனால் மக்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு இந்தக் கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.
இந்தியாவில் கடந்த 2012ம் ஆண்டு 100 பில்லியன் சிகரெட்களை வாங்கி புகையாளர்கள் ஊதித் தள்ளியுள்ளனர் என்று ஈரோமானிட்டர் இன்டர்நேஷனல் என்ற அமைப்பு கூறியுள்ளது.