உங்கள் நாட்டிலேயே மாட்டிறைச்சி சாப்பிட்டு விட்டு வாங்க.... மத்திய அமைச்சரின் பேச்சால் சர்ச்சை!
இந்தியாவிற்கு சுற்றுலா வரும் முன்னர் பயணிகள் உங்கள் நாட்டிலேயே மாட்டிறைச்சி சாப்பிட்டு விட்டு வாருங்கள் என்று சுற்றுலாத் துறை அமைச்சர் அல்போன்ஸ் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : இந்தியாவிற்கு சுற்றுலா வரும் பயணிகள் அவர்கள் நாட்டிலேயே மாட்டிறைச்சி உண்டுவிட்டு வரலாம் என்று மத்திய சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அல்போன்ஸ் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புவனேஸ்வரில் சுற்றுலா செயல்பாடுகள் குறித்த மாநாடு நடைபெற்றது இதில் புதிதாக சுற்றுலாத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கே. ஜே.அல்போன்ஸ் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா மிகப்பழமையான நாகரீகம் வளர்த்த நாடு. உலகில் உள்ள அனைவரும் இங்கு வந்து நம் நாட்டை பார்த்துவிட்டு செல்கின்றனர்.
வரலாறு முக்கியம்
நாம் நமது நாடு மற்றும் வரலாறை எண்ணி பெருமைப்பட வேண்டும், சுற்றுலாப் பயணிகளுக்கு இது மிகவும் அழகான நாடு என்பதை புரிய வைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அங்க சாப்பிட்டு இங்க வரலாமே
இதனைத் தொடர்ந்து மாட்டிறைச்சி தடையால் சுற்றுலாப் பயணிகளின் வருகை பாதிக்கப்பட்டுள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் அல்போன்ஸ், வெளிநாட்டு பயணிகள் இந்தியாவிற்கு சுற்றுலா வரும் முன்னர் அவர்கள் தங்கள் நாட்டிலேயே மாட்டிறைச்சியை உண்டுவிட்டு வரலாம் என்று கூறினார்.
கேரளாவில் சாப்பிடலாம்.. சாப்பிடுவார்கள்
சுற்றுலாத் துறை அமைச்சராக அவர் பொறுப்பேற்பதற்கு முன்னர் கேரள மக்கள் தொடர்ந்து மாட்டிறைச்சியை உண்பார்கள் என்று கூறி வந்தார் கேரளாவைச் சேர்ந்தவரான அல்போன்ஸ். கடந்த ஞாயிற்றுக் கிழமை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய போது மாட்டிறைச்சி தடை விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த போது இது cock and bull கதை போலத் தான் சுவாரஸ்யமானக இருக்கும் ஆனால் நடக்காது என்று கூறியிருந்தார்.
நான் உணவு அமைச்சரல்ல
மேலும் இது குறித்து தான் முடிவு செய்ய முடியாது நான் உணவுத்துறை அமைச்சரல்ல, சுற்றுலாத்துறை அமைச்சர் என்றும் அல்போன்ஸ் கூறியிருந்தார். இந்நிலையில் மூன்றே நாட்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாட்டிறைச்சி தேவையெனில் இந்தியா வருவதற்கு முன்னர் அவர்கள் நாட்டிலேயே சாப்பிட்டு விட்டு வரலாம் என்று கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சராக பொறுப்பேற்றது முதல் தனது நிலைப்பாட்டில் அமைச்சர் மாறியிருக்கிறார் என்று ஊடகங்கள் அல்போன்ஸை விமர்சித்து வருகின்றனர்.