ஜெயலலிதா மீது வழக்குப் போட அனுமதி தேவை.. சுப்ரீம் கோர்ட்டில் 'டிராபிக்' ராமசாமி மனு!
டெல்லி: முதல்வர் ஜெயலலிதா மீது வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும் என்று கோரி பிரபல சமூக சேவகர் டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், பதவிப்பிரமாணத்தை மீறும் வகையில் நடந்து கொள்கிறார் முதல்வர் ஜெயலலிதா. முதல்வர் ஜெயலலிதா எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்திற்கு எதிராக தம்மீதான ஊழல் வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவரே மனுதாக்கல் செய்துள்ளார்.

இதனை சுட்டிக்காட்டி ஜெயலலிதா மீது வழக்குத் தொடர அனுமதி கோரி கடந்த ஜூன் மாதம் ஆளுநருக்கு ஒரு மனு வழங்கியிருந்தேன். அந்த மனு மீது ஆளுநர் அலுவலகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், அந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
குடியரசு தலைவருக்கும், பிரதமருக்கும் முதல்வர் மீது வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மனு அனுப்பியிருக்கிறேன் என்று ராமசாமி தெரிவித்துள்ளார்.
இந்த மனு விரைவில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.