ஹைட்ரோ கார்பனுக்காக விவசாயத்தை அழிக்கக் கூடாது.. ராஜ்யசபாவில் திருச்சி சிவா அதிரடி
ஹைட்ரோ கார்பன் எரிவாயுவிற்காக விவசாயத்தை அழிக்கக் கூடாது என்று ராஜ்யசபாவில் திமுக எம்பி திருச்சி சிவா பேசினார்.
டெல்லி: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 22 நாட்களாக நெடுவாசல் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களது கோரிக்கை ஏற்று திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று ராஜ்யசபாவில் திருச்சி சிவா வலியுறுத்தினார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு அனுமதி வழங்கி இருந்தது. இதற்கு நெடுவாசல் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து 22 நாட்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்திற்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் திமுக எம்பி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து இன்று பேசினார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது கட்டமாக அவைக் கூட்டங்கள் நேற்று தொடங்கின. இன்று காலை தொடங்கிய ராஜ்ய சபா கூட்டத்தில், திமுக எம்பி திருச்சி சிவா புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து பேசினார்.
மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் மக்கள் 22 நாளாக போராட்டம் நடத்தியதை குறிப்பிட்டு பேசிய திருச்சி சிவா, பெட்ரோல், எரிவாயு எடுக்க விவசாயத்தை அழிக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.