மேற்கு வங்கத்தில் திரிணாமுல் தான் "கிங்.." எவ்வளவு முயன்றாலும் பாஜகவுக்கு வாய்ப்பில்லை.! பரபர சர்வே
கொல்கத்தா: நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் எந்தக் கட்சிக்கு எத்தனை இடம் கிடைக்கும் எண்பது குறித்து லோக்போல் அமைப்பு புதிய சர்வே முடிவை வெளியிட்டுள்ளது.
நமது நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. தேர்தல் முடிந்த ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

மேற்கு வங்கத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து திரிணாமுல் வெளியேறித் தனித்துப் போட்டியிடுகிறது. இதனால் அங்கே திரிணாமுல் காங்கிரஸ் vs பாஜக vs காங்கிரஸ் என்று மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் சர்வே: இதற்கிடையே மேற்கு வங்க லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பாக லோக்போல் அமைப்பு புதிய சர்வே முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது. மேற்கு வங்கத்தில் இந்த முறை பாஜகவுக்குக் கணிசமான இடங்கள் கிடைக்கும் என்றாலும் கூட அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்காது என்று இந்த லோக்போல் அமைப்பு தெரிவித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கே அதிக இடங்கள் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் மொத்தம் 42 சீட்கள் இருக்கும் நிலையில், திரிணாமுல் கட்சி 26- 28 சீட்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் பாஜக 11 முதல் 13 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் இடதுசாரிகள் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், அங்கே அவர்கள் 2 முதல் 4 சீட்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த முறை மேற்கு வங்கத்தில் திரிணாமுலை பின்னுக்குத் தள்ள வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக முயன்ற போதிலும், அவர்களால் அது முடியாது என்றே இந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
காரணங்கள்: முதன்மை எதிர்க்கட்சியாக இருப்பதால், திரிணாமுல் காங்கிரஸ் மீதான ஊழல் புகார்களுக்கு எதிரான வாக்குகள் அதிகம் பாஜகவுக்கே செல்கிறது. காங்கிரஸ் கட்சிக்கும் இந்த ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் கிடைத்தாலும் கூட அது மிகக் குறைந்த அளவே செல்கிறது.
மேற்கு வங்கத்தில் சிஏஏ மூலம் ஆதரவை அதிகரிக்க முடியும் என பாஜக நம்பியது. நமோசூத்ரா மற்றும் ராஜ்பங்ஷி வாக்காளர்களைக் கவர பாஜகவின் முயற்சி தோல்வியடைந்தது.. ஏனென்றால் அவர்களால் சிஏஏ கீழ் குடியுரிமை பெறத் தேவையான ஆவணங்களைத் தர முடியவில்லை. மேலும் மம்தாவும் சிஏஏவால் ஆபத்து என்ற பிரச்சாரத்தை வெற்றிகரமாக மக்களிடம் எடுத்துச் சென்றுவிட்டார்.
இஸ்லாமியர்கள்: சிஏஏ காரணமாக இஸ்லாமியர்கள் வாக்குகள் பாஜகவுக்கு எதிராத திரும்பி உள்ளது. மேற்கு வங்கத்தின் தெற்கு பகுதியில் திரிணாமுல் காங்கிரஸுக்கு இஸ்லாமியர்கள் வாக்குகள் செல்கிறது. அதேநேரம் மால்டா உள்ளிட்ட சில தொகுதிகளில் அது காங்கிரசுக்குச் செல்கிறது. மேலும், அங்கே பாஜகவின் பிரச்சாரத்தை திரிணாமுல் ஈஸியாக சமாளித்துவிடுவதாகவும் கூறப்படுகிறது. இவை எல்லாம் தான் பாஜகவின் வெற்றி வாய்ப்பை அங்குப் பாதிக்கிறது.
கடந்த தேர்தல்: கடந்த 2019 லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரை பாஜக மேற்கு வங்கத்தில் அனைவரும் வியக்க வைக்கும் வகையில் 18 சீட்களை வென்றது. அங்கு மொத்தம் 42 சீட்கள் உள்ள நிலையில், திரிணாமுல் 22இல் வென்றது. அதற்குப் பிறகு 2ஆவது மிகப் பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்தது. காங்கிரஸ் கட்சியால் 2 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. சிபிஎம் கட்சியால் ஒரு சீட்டில் கூட வெல்ல முடியவில்லை












Click it and Unblock the Notifications