'திரும்ப வந்துட்டேனு சொல்லு..' மம்தா மாபெரும் முன்னிலை.. வெற்றி கொண்டாட்டத்தை தொடங்கிய தொண்டர்கள்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பவானிபூர் இடைத்தேர்தலில் அம்மாநில முதல்வரும் திரிணாமுல் தலைவருமான மம்தா வெற்றி பெறுவது கிட்ட தட்ட உறுதியாகியுள்ள நிலையில், அக்கட்சியின் தொண்டர்கள் வெற்றி கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டனர்.
Recommended Video
கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தமிழ்நாடு, கேரள மாநிலங்களுடன் மேற்கு வங்கத்திற்கும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்த நிலையில் மேற்கு வங்கத்தில் மட்டும் அதிகபட்சமாக எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டது.
கொரோனா 2ஆம் அலை உச்சத்தில் இருந்த சமயத்தில் எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டது பெரும் சர்ச்சையானது. இந்தத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக திரிணாமுல் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அதை எப்படியாவது முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தலைவர்கள் இறங்கி வேலை செய்தனர். இதற்காகப் பிரதமர் மோடி மேற்கு வங்கத்தில் பல கட்டங்களாகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அதேபோல மூத்த அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அனைத்து முக்கிய அமைச்சர்களும் மேற்கு வங்கத்தில் முகாமிட்டு இருந்தனர். இருந்தாலும் கூட அங்கு பாஜகவால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. 3ஆவது முறையாக மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி மீண்டும் மேற்கு வங்க முதல்வராகப் பதவியேற்றார்.

மம்தா பானர்ஜி
ஆனால், அதேநேரம் நந்திகிராம் தொகுதியின் முடிவுகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. வாக்கு அவருக்கும் சுவேந்து அதிகாரிக்கும் இடையே அங்கு கடும் போட்டி நிலவியது. நள்ளிரவு வரை சென்ற வாக்கு எண்ணிக்கையில் சுமார் 1900 வாக்குகள் வித்தியாசத்தில் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இருப்பினும், இதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி மம்தா, இது தொடர்பாக வழக்கும் தொடர்ந்தார்.

பவானிபூர் இடைத்தேர்தல்
இதனால், எம்எல்ஏ-ஆக இல்லாமலேயே மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வராகப் பொறுப்பேற்றார். சட்டப்படி எம்எல்ஏ-ஆக இல்லாத ஒருவர் முதல்வராகப் பதவியேற்றால், அடுத்த 6 மாதங்களுக்குள் ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட வேண்டும். மம்தா போட்டியிட ஏதுவாக பவானிபூர் தொகுதியில் வென்ற திரிணாமுல் அமைச்சர் ஷோவன்தேவ் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

மம்தா முன்னிலை
இதையடுத்து பவானிபூர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த வாரம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மம்தாவை எதிர்த்து பாஜக சார்பில் பிரியங்கா என்ற வேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார். இதில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை. இந்நிலையில், பவானிபூர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது மம்தா சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.

வெற்றிக் கொண்டாட்டம்
இதன் மூலம் மம்தாவின் வெற்றி கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள திரிணாமுல் தொண்டர்கள் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த வெற்றியின் மூலம் மம்தா, அடுத்த 5 ஆண்டுகளுக்கு எவ்வித சிக்கலும் இல்லாமல் ஆட்சி நடத்த முடியும். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் மம்தா பவானிபூர் தொகுதியில் இருந்து எம்எல்ஏ-ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications