"உண்மையான சேவகனுக்கு திமிர் இருக்கவே கூடாது.." ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பரபர.. யாரை சொல்கிறார்?
நாக்பூர்: லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் இரு தரப்பும் கண்ணியத்தைக் கடைப்பிடிக்கவில்லை என்று விமர்சித்துள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், திமிர் இல்லாத நபரே உண்மையான சேவகன் எனக் கூறியுள்ளது பேசுபொருள் ஆகியுள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 400 சீட்களில் வெல்வோம் என்ற முழக்கத்துடன் தேர்தலைச் சந்தித்த பாஜகவால் பெரும்பான்மையைக் கூடப் பெற முடியவில்லை..

இதனால் தெலுங்கு தேசம், ஜேடியு உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. மோடி பதவியேற்பு விழா நடந்து சில நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் தலைமையிடம் அமைந்துள்ள நாக்பூரில் நடந்த விழாவில் பேசிய மோகன் பகவத், "ஒரு உண்மையான சேவகர் கண்ணியமுடன் இருக்க வேண்டும்.. எந்த பணியில் வேலை செய்தாலும் அந்த பதவிக்கான மரியாதையைத் தர வேண்டும்.. இந்த வேலையை நான் தான் செய்தேன் என்று சொல்லும் திமிர் இருக்கவே கூடாது.. அப்படிப்பட்ட ஒரு நபரை மட்டுமே உண்மையான சேவகன் என்று அழைக்க முடியும்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் பிரச்சாரம் ரொம்ப மோசம்.. இரு தரப்பிலும் பிரச்சாரம் மோசமாகவே இருந்தது.. இரு தரப்பும் இந்த பிரச்சாரத்தில் கண்ணியத்தைப் பின்பற்றவில்லை.. பிரச்சாரத்தின் போது இரு தரப்பும் மாறி மாறி மிக மோசமாக விமர்சித்துக் கொண்டனர். தொழில்நுட்பத்தைக் கூட பயன்படுத்தி தவறான போலியான செய்திகளை மக்களிடையே பரப்பினர். இது தவறான போக்கு.
பிரச்சாரத்தின் போது யாரும் ஒழுக்கத்தைப் பேணவில்லை. அதிலும் குறிப்பாக எதிர்க்கட்சிகள் செயல்பாடு மோசமாக இருந்தது.. ஜனநாயக கட்டமைப்பில் எதிர்க்கட்சியின் பங்கு முக்கியமானது. அவர்கள் எதிர்க்கட்சிகள் தானே தவிர எதிரிகள் இல்லை. அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மக்களுக்காக இரு தரப்பும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும்.
தேர்தல் என்பது ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கான ஒரு செயல்முறையாகும். நாடாளுமன்றம் இரண்டு பக்கங்களைக் கொண்டுள்ளது.. அதேபோலத் தான் எந்தவொரு கேள்விக்கும் இரண்டு விதமான பார்வையை வழங்க முடியும்" என்று அவர் பேசினார்.
அப்போது தான் அவர் மணிப்பூர் விவகாரம் குறித்தும் பேசினார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "தேர்தல் விளையாட்டுகளில் இருந்து விடுபட்டு, மணிப்பூர் மோதலை தீர்க்க வேண்டியது அவசியம்.. மணிப்பூர் அமைதிக்காகக் காத்திருக்கிறது.. கடந்த 10 ஆண்டுகளாக மணிப்பூர் அமைதியாக இருந்தது.. ஆனால் திடீரென அங்கே துப்பாக்கி கலாச்சாரம் மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்த மோதலை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.. அதிகபட்ச முக்கியத்துவத்தை இதற்குத் தர வேண்டும்.. தேர்தலைக் கடந்து நாட்டின் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்" என்று அவர் பேசியிருந்தார். மோகன் பகவத்தின் இந்தப் பேச்சு இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அவர் யாரைக் குறிவைத்து.. எதை மனதில் வைத்து இப்படிப் பேசுகிறார் என்ற விவாதமும் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதலே வன்முறை தொடர்ந்து வருகிறது. அங்கு மெய்தி மற்றும் குக்கி பழங்குடியினத்தவர் இடையே மோதல் தொடர்வதாகச் சொல்லப்படுகிறது. இந்த மோதல் காரணமாக சுமார் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், பல ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டுப் புலம்பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications