அதிமுக ரீ எண்ட்ரி முதல் அரெஸ்ட் வரை.... டிடிவி தினகரன் கடந்து வந்த பாதை
டிடிவி தினகரன் துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டு 70 நாட்களுக்குள் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
டெல்லி : அதிமுக துணைப் பொதுச்செயலாளராக கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி சசிகலாவினால் நியமனம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் சரியாக 70 நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்திற்கே லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுகவில் ரீ எண்ட்ரியான டிடிவி தினகரன் இப்போது திகார் சிறையில் தள்ளப்பட்டுள்ளார்.

கடந்த 70 நாட்களாக குட்டி இளவரசர் போல அதிமுக தலைமை அலுவலகம், போயஸ் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வந்த தினகரன் இப்போது வசமாக லஞ்ச வழக்கில் சிக்கியுள்ளார். ஜெயலலிதா இருந்த வரை அட்ரஸ் இல்லாமல் இருந்த தினகரன், கடந்த 70 நாட்களில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டார் என்றே அதிமுகவினர் அங்கலாய்க்கிறார்கள்.
•டிசம்பர் 5 - ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு மன்னார்குடி குடும்பம் போயஸ்தோட்டத்திற்குள் அடிஎடுத்து வைத்தது. அப்போது மெதுவாக உள்ளே நுழைந்தார் டிடிவி தினகரன்.
• டிசம்பர் 10 - சசிகலாவை பின்னால் இருந்து இயக்கினார். அதிமுக நிர்வாகிகளை தூண்டிவிட்டு அவரை பொதுச்செயலாளராக அறிவிக்க வைத்தார். பின்னர் சசிகலாவிற்கு முதல்வர் ஆசையை தூண்டிவிட்டவர் இவர்தான் என்ற புகார் எழுந்தது.
• பிப்ரவரி 15 ஆம் தேதி சித்தி சசிகலாவின் மூலம் அதிமுகவிற்குள் நுழைந்தார் டிடிவி தினகரன். ஆரம்பமே அதிரடியாக துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
•அதிமுகவில் இருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்த டிடிவி தினகரன், எஸ். வெங்கடேஷ் ஆகியோர் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்ஜிஆரில் இன்று அறிவிப்பு வெளியானது. இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா வெளியிட்டிருந்தார்.
•தங்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டிக் கொண்டதால், அவர்கள் கட்சியில் சேர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்திருந்தார்.
•பிப்ரவரி 16 - ஆளுநரை சந்திக்கப் போகும் போதும், அரசியல் நிகழ்ச்சிகளின் போதும் முன்னிலைப் படுத்திக்கொண்டார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்ற போது முதல்வரிசையில் அமர்ந்து ரசித்தார்.
•பிப்ரவரி 20 - கட்சியையும், ஆட்சியையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த டிடிவி தினகரன், அமைச்சர்கள் பலரை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார், முதல்வர் கூட தனது முடிவின் படி நடக்க வேண்டும் என்று வாய்மொழியாக கட்டளையிட்டார்.
•மார்ச் 15 - ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார் டிடிவி தினகரன். துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட 1 மாதத்திற்குள் அவர் அதிமுக வேட்பாளரானது அமைச்சர்களுக்கே அதிர்ச்சிதான்.
•மார்ச் 22 - இரட்டை இலை யாருக்கு என்பதில் சிக்கல் ஏற்படவே கட்சி, கொடி, சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதிலேயே பாதி தோல்வியடைந்தார் டிடிவி தினகரன்.
•மார்ச் 23 - அதிமுக அம்மா அணி என்றும், சின்னமாக தொப்பியை பெற்றும் ஆர்.கே. நகரில் களமிறங்கினார் டிடிவி தினகரன்
•ஏப்ரல் 7- வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் எழவே அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது. இதில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கின.
•ஏப்ரல் 10 - வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
•ஏப்ரல் 17 - இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்தாக சுகேஷ் என்ற இடைத்தரகரை டெல்லியில் போலீசார் கைது செய்தனர். அவன் டிடிவி தினகரன் பெயரை தெரிவிக்கவே வசமாக சிக்கினார்.
•ஏப்ரல் 18 - டிடிவி தினகரனை அதிமுகவில் இருந்து விலக்கி வைப்பதாக அமைச்சர்கள் அதிரடியாக அறிவித்தனர். உடனடியாக தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார் தினகரன்.
•ஏப்ரல் 19 - நான் அதிமுகவில் இருந்து நேற்றே விலகிவிட்டேன். கட்சி நலன் கருதி விலகுவதாக கூறினார். உடனே அவரை தியாகியாக்கினர் பலர்.
•ஏப்ரல் 22 - டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியதன் பேரில் நேரில் ஆஜாரானார் . 4 நாட்கள் கிடுக்கிப் பிடி விசாரணை நடைபெற்றது. சுகேஷ் உடன் பேசியது ஆடியோ ஆதாரம் சிக்கியது.
•ஏப்ரல் 26 - நான்கு நாட்கள் விசாரணைக்குப் பின்னர் வேறு வழியின்றி சுகேஷ் தெரியும் என்று ஒத்துக்கொண்டார் டிடிவி தினகரன். டெல்லி போலீஸ் டிடிவி தினகரனை நோண்டி நொங்கெடுத்து கடைசியில் கைது செய்து திகார் சிறைக்கு அனுப்பி வைத்துள்ளது.
•எது எப்படியோ பிப்ரவரி 15ல் தொடங்கிய டிடிவி தினகரனின் சகாப்தம் ஏப்ரல் 26ல் முடிவுக்கு வந்து விட்டது என்றே கூறலாம்.












Click it and Unblock the Notifications