தினகரனுக்குதான் அமமுக பெயர், குக்கர் சின்னம்.. தேர்தல் ஆணையமே சொல்லிவிட்டதாம்
டிடிவி. தினகரனுக்கு குக்கர் சின்னம் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரும் நிச்சயம் கிடைக்கும் என்று ராஜாசெந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: டிடிவி தினகரன் கோரிய குக்கர் சின்னம் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியின் பெயரையும் ஒதுக்க தேர்தல் ஆணையம் ஒப்புகொண்டுள்ளதாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி. தினகரன் கடந்த மார்ச் 15ம் தேதி புதிய அணியை அறிவித்தார். தனது அணிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்றும் பெயர் வைத்தார், இந்நிலையில் தனக்கு குக்கர் சின்னத்தையும், அமமுக என்ற கட்சியின் பெயரையும் தேர்தல் ஆணையம் ஒதுக்க உத்தரவிடுமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் டிடிவி தினகரன் கோரும் சின்னம், கட்சியின் பெயர் குறித்து முடிவு செய்யுமாறு தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தில் இந்த விவகாரம் குறித்த விசாரணைக்கு டிடிவி. தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் நேரில் ஆஜரானார்.
விசாரணை முடிந்து ராஜாசெந்தூர்பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது : டிடிவி. தினகரன் கோரும் குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டோம். டெல்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
எங்கள் தரப்பில் இருந்து சின்னம், கட்சியின் பெயர் தொடர்பாக தேர்தல் ஆணையம் கோரிய கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. நாங்கள் கோரியபடியே குக்கர் சின்னத்தையும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரையும் ஒதுக்குவதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓரிரு நாளில் சின்னமும், பெயரும் ஒதுக்கப்படும்.
நாங்கள் கட்சிக்கு வைத்த பெயர் வேறு யாரும் பதிவு செய்திருக்கிறார்களா என்று ஆணையர் கேட்டதற்கு அதிகாரிகள் அவ்வாறு யாரும் பதிவு செய்யவில்லை என்று பதில் அளித்தனர். இதே போன்று குக்கர் சின்னமும் பொது சின்னமாக இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ஆர்கே நகர் தேர்தலில் தினகரன் குக்கர் சின்னத்தில் அமோக வெற்றி பெற்றிருப்பதை சுட்டிகாட்டினோம், அதனையும் ஆணையம் குறிப்பெடுத்துக் கொண்டது. எனவே குக்கர் சின்னம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இரண்டும் கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்றே தெரிகிறது.
டெல்லி உயர்நீதிமன்றம் மார்ச் 9ம் தேதி தீர்ப்பு அளித்தது, மார்ச் 31க்குள் கட்சியின் சின்னம், பெயர் குறித்து தேர்தல் ஆணையம் இறுதி செய்ய வேண்டும். எனவே ஓரிரு நாட்களில் எங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று நம்புகிறோம் என்றும் ராஜா செந்தூர்பாண்டியன் கூறினார்.












Click it and Unblock the Notifications