துளசிராம் போலி என்கவுன்ட்டர் வழக்கில் சிபிஐ கோர்ட்டில் இன்று ஆஜராகும் மோடிக்கு நெருக்கமான அமித் ஷா
மும்பை: துளசிராம் பிரஜபதி போலி என்கவுன்ட்டர் வழக்கில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமான பாஜக தலைவரான அமித் ஷா மும்பையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜராகக்கூடும் என்று கூறப்படுகிறது.
கடந்த 2005ம் ஆண்டில் குஜராத்தைச் சேர்ந்த சொராபுத்தீன், அவரது மனைவி கவுசர் பீ மற்றும் துளசிராம் பிரஜபதி ஆகியோர் ஆந்திராவில் இருந்து பேருந்து மூலம் குஜராத் வந்தனர். காந்திநகர் அருகே அவர்கள் தீவிரவாத தடுப்பு போலீசாரால் கடத்தப்பட்டனர். அவர்கள் தீவிரவாதிகள் என்றும், குஜராத்தின் அப்போதைய முதல்வரான நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களை கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டதாகக் கூறப்பட்டது. இதில் சொராபுத்தீன் மற்றும் அவரது மனவை சில நாட்கள் கழித்து சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். ஆனால் இது போலி என்கவுன்ட்டர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் சொராபுத்தீன் கொலையை பார்த்த ஒரே சாட்சியான துளசிராம் 2006ம் ஆண்டில் ஒரு ஆண்டு கழித்து போலீசாரால் கொலை செய்யப்பட்டார். ஆனால் அவர் தங்கள் காவலில் இருந்து தப்பியோட முயன்றபோது அவரை சுட்டுக் கொன்றதாக போலீசார் தெரிவித்தனர்.
சொராபுத்தீன் போலி என்கவுன்ட்டர் குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமான அமைச்சர் அமித் ஷாவை 2010ம் ஆண்டு ஜுலை 25ம் தேதி கைது செய்தது. 3 மாதம் சிறையில் இருந்த அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்கிடையே துளசிராம் போலி என்கவுன்ட்டர் வழக்கு குறித்து விசாரணை நடத்திய சிபிஐ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில் குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சரான அமித் ஷா, போலீஸ் அதிகாரிகள் உள்பட 18 பேரின் பெயர்கள் இருந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் 9ம் தேதி நீதிமன்ற விசாரணை துவங்கியபோது மே 23ம் தேதி அமித் ஷா நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. ஆனால் சிபிஐ நீதிபதி விடுப்பில் சென்றதால் வழக்கு விசாரணை 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
உடல் நலக்குறைவு காரணமாக அமித் ஷா கடந்த 6ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் இந்த வழக்கில் மும்பையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜராவார் என்று கூறப்படுகிறது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அமித் ஷோ தாக்கல் செய்த மனு குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக அமோக வெற்றி பெற அமித் ஷா தான் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications