ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் டிவி செய்தி ஆசிரியர் அசுதோஷ் கோஷ்
நாட்டில் தொழிலதிபர்கள் பலர் வரிசையாக ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து வரும் நிலையில், ஊடகத்துறையிலிருந்து அக்கட்சியில் இணைந்துள்ளார் அசுதோஷ் கோஷ்.
ஏற்கனவே ஊடகத்துறையில் பணியாற்றிய ராக்கி பிர்லா ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து பணியாற்றியதன் காரணமாக தற்போது டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அசுதோஷ் கோஷ் கூறியதாவது: 'நான் எப்போதும் அரசியல் சுத்தமானதாக கருதியதில்லை, ஆனால் ஆம் ஆத்மி கட்சி அதில் புதிய பாதையை உருவாக்கியுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற எண்ணம் ஏதும் எனக்கில்லை. இந்தியா வல்லரசாக வேண்டும் எனில் நாட்டில் ஊழலை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்' என கூறினார்.
சமூக சேவகியான மேதா பட்கரையும் தங்கள் கட்சியில் இணையுமாறு ஆம் ஆத்மி கட்சி கோரியுள்ளது. ஆனால் அவர் தனது முடிவை இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.