எவ்வளவு கஷ்டம்! இது சாதாரண விஷயமல்ல! உக்ரைன் விவகாரத்தில் மோடியை பாராட்டிய மத்திய அமைச்சர்!
ஹமீர்பூர்: ‛‛போர் நடக்கும் உக்ரைனில் இருந்து மாணவர்களை இந்தியாவுக்கு மீட்டு வருவது சாதாரண விஷயமல்ல. இதை தான் பிரதமர் நரேந்திர மோடி வெற்றிகரமாக செய்துள்ளார்'' என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறினார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால் அங்கு மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இவர்களை பத்திரமாக மீட்க மத்திய அரசு முடிவு எடுத்தது. போர் துவங்கிய பிப்ரவரி 24 முதல் உக்ரைன் விமான நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் இந்திய மாணவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

ஆபரேஷன் கங்கா
இதையடுத்து உக்ரைனில் இருந்து வெளியேறும் இந்திய மாணவர்கள் ‛ஆபரேஷன் கங்கா' மூலம் விமானங்களில் மீட்கப்படுகின்றனர். அதாவது அண்டை நாடுகளான ருமேனியாவின் புக்காரெஸ்ட், ஹங்கேரியின் புத்தாபெஸ்ட், போலந்தின் ரிசோ, சுலோவாகியாவின் கோசிஸ் நகர்களில் இருந்து விமானங்களில் தாயகம் திரும்புகின்றனர்.

ஒருங்கிணைப்பு குழு
மத்திய அரசின் ஆபரேஷன் கங்கா திட்டம் மூலம் நேற்றைய நிலவரப்படி உக்ரைனில் இருந்து 17,400 பேர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதற்கான மீட்பு பணிகளை மத்திய அமைச்சர்களான ஹர்தீப் சிங் புரி ஹங்கேரியிலும், ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியாவிலும், கிரண் ரிஜிஜூ சுலோவாகியாவிலும், வி.கே.சிங் போலந்திலும் ஒருங்கிணைப்பு செய்து வருகின்றனர்.

சாதாரண விஷயமல்ல
இந்நிலையில் தான் இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் புகழ்ந்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛உக்ரைனில் தவிக்கும் மாணவர்களை இந்தியா அழைத்து வருவதற்கான அனைத்து வசதிகளையும் பிரதமர் நரேந்திர மோடி செய்து கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ரஷ்யா, உக்ரைன் அதிபர்களிடம் பேசியுள்ளார். போருக்கு நடுவே மாணவர்களை மீட்பது, மாணவர்கள் வெளியேற சிறப்பு வழியை ஏற்படுத்தி கொடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல.

எதிர்க்கட்சிகள் கேலி
இதை பிரதமர் நரேந்திர மோடி செய்துள்ளார். மத்திய அமைச்சர்களையும் உக்ரைன் அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தை எதிர்க்கட்சிகள் கேலி செய்தன. தற்போதும் மத்திய அரசை குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் கொரோனா பேரிடர் காலத்தில் ஜன்தன் வங்கி கணக்குகளில் நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் பெண்களுக்காக 20.5 கோடி நிதி உதவி செய்யப்பட்டது'' என்றார்.முன்னதாக உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்பதில் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாக காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் விமர்சனம் செய்திருந்தன.
Recommended Video

பிரதமர் குற்றச்சாட்டு
இதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்கையில் ‛‛உக்ரைன் விவகாரத்தில் மத்திய அரசை குற்றம்சாட்டும் சித்தாந்தத்தை மட்டும் எதிர்க்கட்சிகள் கொண்டுள்ளன. இந்த விவகாரத்திலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியல் லாபம் தேடுகின்றன'' என குற்றம்சாட்டி இருந்தார். மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‛‛உக்ரைன் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு உத்தர பிரதேச தேர்தலில் சாதகமான சூழலை ஏற்படுத்தும்'' என நம்பிக்கை தெரிவித்திருந்தார். மத்திய விமான போக்குவரத்து துறையின் நேற்றைய நிலவரப்படி 17,400 பேர் உக்ரைனில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications