சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களையும் அனுமதிக்கலாம்... மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா அதிரடி
டெல்லி: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, பெண்கள் இதற்கு முன்னரும் அய்யப்பன் கோவிலுக்குள் போகவில்லை என்பதற்கான ஆதாரங்களைத் தர முடியுமா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதனைத் தொடர்ந்து அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான விவாதம் நாடு தழுவிய அளவில் நடைபெற்று வருகிறது. மேலும் இவ்வழக்கில் மத நம்பிக்கையில் அரசு தலையிட முடியாது என கேரளா அரசு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் மகேஷ் சர்மா, அனைத்து மத வழிபாட்டு தலங்களில் இன ரீதியிலோ, பாலினம் சார்ந்த பாகுபாடோ இருக்கக் கூடாது என்பதுதான் மத்திய அரசின் கருத்து எனக் கூறியுள்ளார்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற அமைச்சர் மகேஷ் சர்மா இந்த கருத்து புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.