பாஜகவை போல வேறு எந்த கட்சியும் விவசாயிகளுக்கு சிறப்பான திட்டங்களை அமல்படுத்தவில்லை! யோகி பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேச விவசாயிகளுக்கு பாஜக செய்த சிறப்பான திட்டங்களை போல வேறு எந்த மாநில அரசும் செய்யவில்லை என்று யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி அதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்ற வருகிறது. இந்நிலையில் யோகி முதலமைச்சராக பதவியேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை மாநில அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது. காரணம் உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக இதுவரை யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் நீடித்ததில்லை. அந்த வகையில் யோகி ஆதித்யநாத் புதிய சாதனையை படைத்திருக்கிறார்.

இதனை பாஜக அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தை விவசாயிகளிடம் மேலும் விரிவாக கொண்டு சேர்க்க சிறப்பு பிரசாரத்தை மாநில அரசு தொடங்கியுள்ளது. இது குறித்து யோகி ஆதித்யநாத் கூறுகையில், "இந்த சிறப்பு பிரசாரமானது கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது. தற்போது இது ஏராளமான விவசாயிகளை சென்று சேர்ந்திருக்கிறது.
தேசிய அளவில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதன்மையானதாக இருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில் இம்மாநிலத்தில் ஒரேயொரு விவசாயி கூட தற்கொலை செய்துகொள்ளவில்லை. அதேபோல பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.
வழக்கமாக மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் நடைபெறும். ஆனால் முதன் முறையாக நாங்கள் இந்த மாநாட்டை லக்னோவில், உத்தரப் பிரதேசத்தில் நடத்தி காட்டியிருக்கிறோம். இதனையடுத்து சில நாட்களுக்கு முன்னர் மாநிலத்திற்கான பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
குறிப்பாக உட்கட்டமைப்பு மேம்பாடு, கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாவட்டம் தோறும் ஒரு அரசு மருத்துவக்கல்லூரி உருவாக்கப்படும் என்றும், இரு கல்லூரியாகவும் மருத்துவமனையாகவும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த மாநிலத்தை பொறுத்த அளவில் கரும்பு விவசாயிகள் அதிகம் இருக்கின்றனர். விவசாயிகளுக்கு பாஜக செய்ததை போல வேறு எந்த மாநிலத்திலும், எந்த கட்சியும் செய்யவில்லை" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications