மார்க் போடாத பேராசிரியரை பழிவாங்க பெங்களூர் ஏர்போர்ட்டுக்கு மிரட்டல் விடுத்த 2 எம்.டெக். மாணவர்கள்
பெங்களூர்: பெங்களூரில் கல்லூரி பேராசிரியரை பழிவாங்க 2 மாணவர்கள் அவரது கம்ப்யூட்டரில் இருந்து போலி ஐடி மூலம் பெங்களூர் விமான நிலையத்திற்கு தாக்குதல் மிரட்டல் விடுத்து சிக்கியுள்ளனர்.
பெங்களூர் விமான நிலையத்தை தாக்கப் போவதாக கடந்த மார்ச் மாதம் 22 மற்றும் மே 6ம் தேதி இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பெங்களூரில் உள்ள ஈஸ்ட் வெஸ்ட் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியரின் பெயரில் அவரது கம்ப்யூட்டரில் இருந்து மிரட்டல் இமெயில் வந்தது தெரிய வந்தது. இதையடுத்து கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தியதில் இமெயில்களுக்கும், பேராசிரியருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதும், அதே கல்லூரியில் எம்.டெக். படிக்கும் மாணவர்கள் ராகவேந்திரா மற்றும் ஹொய்சாலா ஆகியோரின் வேலை என்பதும் தெரிய வந்தது.
இது குறித்து மாணவர்கள் கூறுகையில்,
அந்த பேராசிரியர் எப்பொழுது பார்த்தாலும் மாணவிகளுக்கு தான் அதிக மதிப்பெண்கள் அளிக்கிறார். எங்களுக்கு குறைந்த மதிப்பெண்கள் அளிக்கிறார். இதனால் அவரை பழிவாங்க அவரது கம்ப்யூட்டரை பயன்படுத்தி அவர் பெயரில் போலி இமெயில் ஐடி உருவாக்கி விமான நிலையத்திற்கு மிரட்டல் விடுத்தோம் என்றனர்.
இதையடுத்து போலீசார் அந்த இரண்டு மாணவர்களையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications