உத்தர பிரதேசத்தில் கலவரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது பாஜக அரசு.. யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தர பிரதேசம் வன்முறை இல்லாத மாநிலமாக மாறியிருப்பதாகவும் கலவரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து இருப்பதாகவும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
உத்தர பிரதேசத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 2 வது கட்ட தேர்தல் வரும் 11 ஆம் தேதி நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 760 உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 13 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், அலிகாரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசினார். அதில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:-
உத்தர பிரதேசம் தற்போது கலவரங்கள் இல்லாத மாநிலமாக மாறியுள்ளது. வீதியில் நடக்கும் வன்முறை கலாசாரத்தை நாங்கள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். இளைஞர்கள் கல்வி மேம்படுவதற்காக டேபிளட்ஸ் (tablets) அளித்து வருகிறோம். அலிகாரில் உள்ள பூட்டுகளை பயன்படுத்தி கலவரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறோம்.

அலிகார் பல்கலைக்கழகம் கட்டுவதற்காக தனது சொந்த நிலத்தை கொடுத்த மகாராஜா மகேந்திர பிரதாப் சிங்கிற்கு அந்த பல்கலைழகத்தில் ஒரு நினைவு சின்னம் கூட இல்லை. பாஜகவின் இரட்டை என்ஜின் கொண்ட அரசுதான் மகாராஜா மகேந்திர பிரதாப் சிங் பெயரில் பல்கலைக்கழகம் கட்டியுள்ளது.
உத்தர பிரதேசமும் நமது நாடும் பாஜக ஆட்சியின் கீழ் பெரும் மாற்றத்தை சந்தித்து உள்ளது. பிரிவினைவாதம், பயங்கரவாதம், நக்சலிசம் போன்றவற்றை முற்றிலும் ஒழிக்க பாஜக அரசு பணியாற்றி வருகிறது. நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பட்டுள்ளதால் இந்தியாவின் மதிப்பும் சர்வதேச அளவில் உயர்ந்துள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications