மேகக்கூட்டத்தில் ஹெலிகாப்டர் மோதி விபத்து: உத்தரகாண்ட் முதல்வர் படுகாயம்
டெல்லி: டெல்லி அருகே மேகக் கூட்டத்தில் ஹெலிகாப்டர் மோதிய விபத்தில் உத்தரகாண்ட் முதலமைச்சர் ஹரீஷ் ராவத் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
ஹரீஷ் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் சண்டிகரில் இருந்து டெல்லி சென்ற போது, மேகக்கூட்டத்தில் மோதி விபத்திற்குள்ளானது. பைலட் சாமர்த்தியமாக செயல்பட்டு ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்கினர்.

அப்போது, ஹெலிகாப்டரின் மேற்கூரை மீது தலை மோதியதால் ஹரீஷ் ராவத் படுகாயமடைந்தார். மேகக் கூட்டத்தில் மோதியதால் ஹெலிகாப்டர் 2,3 முறை குலுங்கியதாகவும் ஒவ்வொரு முறை குலுங்கிய போதும் முதல்வரின் தலை, மேற்கூரையில் மோதியதில் அவரது கழுத்தில் காயம் ஏற்பட்டதாகவும் அவரது பாதுகாவலர் தெரிவித்தார்.
கழுத்தில் எலும்பு முறிவு மற்றும் முதுகிற்கு அருகில் அவருக்கு காயமேற்பட்டதால் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மோசமான வானிலையே விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சீட் பெல்ட் அணியாததால்...
பயணத்தின் போது ஹரீஷ் ராவத் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததும் அவரது காயத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. சிலதினங்களுக்கு கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த கோபிநாத் முன்டேவின் மரணத்திற்கு சீட் பெல்ட் அணியாதது முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications