உத்தரகாண்ட் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் ஹரீஷ் ராவத் தோல்வி: அதிர்ச்சியில் காங்கிரஸ்
டேராடூன்: நடந்துமுடிந்த உத்தரகாண்ட் மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் ஹரீஷ் ராவத் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலுக்கான முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. இதில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக முன்னிலையில் இருக்கிறது.
பாஜக ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. உத்தரகாண்டில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என தெரியவருகிறது.

ஹரீஷ் ராவத்
இந்த தேர்தலில் உத்தரகாண்டில் மொத்தம் உள்ள 70 இடங்களில் 19 இடத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளரான ஹரீஷ் ராவத், லூல்குவா தொகுதியில் 14000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரான மோகன் சிங்கிடம் தோல்வியைத் தழுவியுள்ளார்.

காரணம் என்ன
காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளரே தோல்வியை சந்தித்துள்ளதால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியில் இருக்கிறது. உத்தரகாண்டில் பாஜக பிரசாரத்தை தொடங்கி வேலையை ஆரம்பித்த பிறகுதான், காங்கிரஸ் கட்சி, உத்தரகாண்டில் யார் முதல்வர் என்று யோசிக்கவே ஆரம்பித்தது. உத்தரகாண்டில் சரியான பிரசாரம் இல்லாததும், கடைசி நேரத்தில் பிரசாரம் செய்ததும் தான் தோல்விக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

முதல்வர் வேட்பாளர்
காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில், முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கும், உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கணேஷ் கொடியாலுக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. இதையடுத்து ராகுல் காந்தி தலையிட்டு, ஹரீஷ் ராவத்துக்கு பச்சைக்கொடி காட்டினார். அதன்பிறகே காங்கிரஸ் தங்கள் பிரசாரத்தை தொடர்ந்தது. உத்தரகாண்ட் காங்கிரஸில் இருக்கும் உட்கட்சிப் பூசலும் காரணம் என தெரிகிறது.

கட்சித்தாவல்
அதேநேரம், உத்தரகாண்ட் மாநில காங்கிரசின் முன்னாள் தலைவர் கிஷோர் உபாத்தியாயாவை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் காங்கிரஸ் தலைமை நீக்கியுள்ளது. இது தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திரும்பி இருக்கிறது. காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு போட்டி கொடுக்கும், அதனால் இங்கு தொங்கு சட்டசபை அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் தற்போது தோல்வி முகத்தில் இருக்கிறது.

பாஜக
உத்தரகாண்டில் பாஜக கிட்டத்தட்ட 46 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.
இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிட்டதும், காங்கிரஸின் தோல்விக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆம் ஆத்மி உத்தரகாண்டில் எந்த இடத்திலும் முன்னிலையில் இல்லை என்றாலும், காங்கிரஸ் கட்சிக்கு செல்ல வேண்டிய ஓட்டுகளைப் பிரித்ததற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.












Click it and Unblock the Notifications