பிரகாஷை கலவரத்தில் கொன்றதாக முஸ்லிம் கைது..கடைசியில் கள்ளக்காதலால் போலீசே தீர்த்துக்கட்டியது அம்பலம்
டேராடூன்: உத்தராகண்ட் மாநில ஹல்த்வானியில் ஏற்பட்ட கலவரத்தில் பிகாரை சேர்ந்த பிரகாஷ் சிங் கொல்லப்பட்டதாக கூறி இஸ்லாமியரை போலீசார் கைது செய்த நிலையில் தற்போது அவர் கள்ளக்காதல் விவகாரத்தில் போலீசாராலேயே கொல்லப்பட்டு இருப்பது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
உத்தராகண்ட் மாநில ஹல்த்வானியில் மதர்சா இடிப்பை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் காரணமாக வன்முறை வெடித்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டார்கள். இந்த நிலையில் ஹல்த்வானியில் பீகாரை சேர்ந்த 24 வயது பிரகாஷ் சிங் என்பவரது உடல் ஹல்த்வானியின் பன்புல்பூரா பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இவரை கலவரத்தின்போது இஸ்லாமியர் கொன்றதாக முதலில் போலீசார் ஒருவரை கைது செய்தனர்.

இதனை குறிப்பிட்டு மீண்டும் மத மோதலை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பலர் பதிவிட்டு வந்த நிலையில், பெரும் டிவிஸ்டாக மொத்தமாக இந்த வழக்கு வேறு கோணத்தில் திரும்பி இருக்கிறது. போலீசார் நடத்திய கூடுதல் விசாரணையில் பிரகாஷ் சிங் பீகாரை சேர்ந்தவர் என்றும், உத்தராகண்ட் மாநிலத்திற்கு வேலை தேடி வந்தவர் என்பதும் தெரியவந்தது. இறந்தவரிம் தொடர்பு எண்ணை ஆராய்ந்து அவரது அழைப்புகளை பார்த்தபோது அவர் சித்தர்கஞ்ச் பகுதியை சேர்ந்த சூரஜ் என்ற இளைஞரிடமும், உத்தராகண்டை சேர்ந்த மற்றொரு தொடர்பு எண்ணுக்கும் அதிக நேரம் பேசி உள்ளார்.
அதன் அடிப்படையில் நடத்தப்பட்டு விசாரணையில் பல்வேறு திடுக்கிட வைக்கும் தகவல்கள் கிடைத்து உள்ளன. பிரகாஷும் சூரஜும் 2 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து உள்ளனர். சூரஜுக்கு பிரியங்கா என்ற சகோதரி உள்ளார். பிரியங்காவின் கணவர் பிரேந்திர சிங் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் பிரியங்காவுக்கும் பிரகாஷுக்கும் இடையே திருமணத்தை கடந்த தகாத உறவு இருந்து இருக்கிறது. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் பிரியங்கா ஒரு நாள் தனது கணவர் பிரேந்திர சிங்கிடம் தனக்கும் பிரகாஷுக்கும் இடையே உள்ள உறவு குறித்து தெரிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில் பிரகாஷ் பிரேந்திர சிங்கிற்கு போனில் தொடர்புகொண்டு இருக்கிறார். மறுநாள் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்து இருக்கிறார். அதாவது பிரகாஷ் பிரியங்காவின் போனில் இருந்து பிரேந்திர சிங்கிற்கு தொடர்புகொண்டதாகவும் ஹல்த்வானியில் தன்னை சந்திக்குமாறும் கேட்டுகொண்டு உள்ளார். அந்த இடத்தில்தான் பிரகாஷின் உடலும் கிடைத்து இருக்கிறது. பிரகாஷ், பிரியங்காவின் வீடியோவை தனது செல்போனில் பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டியதாகவும், அதை நீக்க வேண்டும் என பிரேந்திர சிங் கேட்டுகொண்டதாகவும், ஆனால் பிரகாஷ் அதை மறுத்துவிட்டதால் கொலை நடந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
இது தொடர்பாக காவலர் பிரேந்திர சிங் (36), அவரது பங்குதாரர் நயீம் கான் (50), மைத்துனர் சூரஜ் பெயின் (28) அவரது நண்பர் பிரேம் சிங் (30) ஆகியோரை கைது செய்து உள்ளனர். பிரேந்திர சிங்கின் மனைவி பிரியங்கா தலைமறைவாகி இருக்கிறார். பிரகாஷ் சிங்கின் மரணம் தனிப்பட்ட பகையால் ஏற்பட்ட கொலையாக கணக்கிடப்பட்டு உள்ளதால் உத்தராகண்ட் கலவரத்தால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 5 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications