பாஜக எம்.பி வீட்டில் சாப்பிட போன வெங்கய்யா நாயுடுவுக்கு ஷாக்... செருப்ப ஆட்டைய போட்டுட்டாங்கப்பா!
பெங்களூரில் பாஜக எம்பி வீட்டில் காலை உணவு சாப்பிட்டுவிட்டு திரும்பிய வெங்கய்யா நாயுடு வெறுங்காலுடன் தான் வீடு திரும்ப வேண்டியதாயிற்று. அவரின் காலணிகளை யாரோ ஆட்டைய போட்டது தான் இதற்கு முக்கிய காரணம்
பெங்களூரு : பெங்களூரில் பாஜக எம்பி வீட்டிற்கு காலை உணவு சாப்பிடச் சென்ற துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு வெறுங்காலுடன் திரும்ப வேண்டியதாயிற்று. உணவு சாப்பிட்டு விட்டு வெளியே வந்து பார்த்த போது வெங்கய்யா நாயுடுவின் காலணியை யாரோ திருடிச் சென்றது தான் இதற்கு முக்கியக் காரணம்.
நாட்டில் கோவில், திருவிழா, திருமண வீடுகளில் செருப்பு காணாமல் போவது என்பது சாதாரணமான விஷயம். ஆனால் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவிற்கு நேர்ந்த இந்த நெருடலான நிலை வேறு யாருக்குமே ஏற்பட்டிருக்காது. பெங்களூரில் பாஜக எம்பி ஒருவரின் வீட்டிற்கு காலை உணவு சாப்பிட விருந்தாளியாக சென்றுள்ளார் வெங்கய்ய நாயுடு.
பாஜக எம்பி பிசி மோகன் வீட்டில் தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது. சுமார் ஒரு மணி நேரம் நடந்த சந்திப்பில் அவரது நலன் விரும்பிகள், அவரை பார்க்க விரும்பியவர்களை சந்தித்து உரையாடியுள்ளார் வெங்கய்யா நாயுடு. மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, கர்நாடக எம்எல்ஏக்கள் சிடி ரவி மற்றும் ஜெகதீண் ஷெட்டர் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்து வெளியே வந்த வெங்கய்யா நாயுடுவிற்கு ஒரு ஷாக் விஷயம் காத்திருந்தது. தனது ஷூவை போட சென்றவர் அதனை காணாமல் சங்கடமடைந்து நின்றார். இதனையடுத்து பாதுகாப்பு அதிகாரிகளும், கட்சியினரும் அவரது காலணி எங்கே என்று துளாவினார்கள். ஆனால் யாருக்கும் கிடைக்கவில்லை.
வெங்கய்ய நாயுடுவை பார்க்க பலரும் வந்து சென்றதால் அவர்களில் யாரேனும் காலணியை மாற்றி போட்டு சென்றிருக்கலாம் என்று கருதப்பட்டது. இதனையடுத்து அவரின் உதவியாளர்கள் அருகில் இருந்த கடைக்கு சென்று புதிய ஜோடி ஷூக்களை வாங்கி வந்து கொடுத்தனர். காலணியை காணவில்லை என்ற வெறும் காலுடன் நிற்கும் நிலை துணை குடியரசுத் தலைவருக்கே ஏற்பட்டது. இந்த திடீர் சம்பவத்தால் வெங்கய்யா நாயுடுவின் அன்றைய நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டன.