தீவிபத்தில் தப்ப பால்கனிகளில் தஞ்சமடைந்த நோயாளிகள்.. பார்க்கவே பரிதாபத்தை வரவழைக்கும் வீடியோ
அமராவதி: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கொரோனா தனிமை மையமாக செயல்பட்டு வரும் சொர்ணா பேலஸ் என்ற ஹோட்டலில் தீவிபத்து ஏற்பட்டவுடன் தப்பிப்பதற்காக பால்கனிகளில் தஞ்சமடைந்த நோயாளிகளின் வீடியோ காட்சிகள் பார்க்கும் போது பரிதாபத்தை வரவழைக்கிறது.
Recommended Video
ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த வெள்ளிக்கிழமை அன்று 2 லட்சத்தை தாண்டியது. இதுவரை 1.2 லட்சம் பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் பெரும்பாலான மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிந்துள்ளன.
புதிதாக பாதிக்கப்படுவோருக்கு இடமில்லாத நிலை உள்ளது. இதனால் நட்சத்திர ஹோட்டல்கள் கொரோனா தனிமை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.
குஜராத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் கொரோனா மையத்தில் தீவிபத்து.. அடுத்தடுத்த சம்பவங்களால் அதிர்ச்சி
ஆந்திரா
அது போல் ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள சொர்ணா பேலஸ் என்ற நட்சத்திர ஹோட்டல் கொரோனா தனிமை மையமாக அண்மையில் மாற்றப்பட்டது. இங்கு 50 க்கும் மேற்பட்ட நோயாளிகள் தங்கியுள்ளனர். அது போல் மருத்துவர்கள், செவிலியர்களும் தங்கியுள்ளனர்.
ஹோட்டலில் கரும்புகை
இந்த நிலையில் இங்கு இன்று அதிகாலை 5 மணிக்கு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தால் ஹோட்டலை சுற்றி கரும்புகை சூழ்ந்து கொண்டது. தீப்பிழம்புகள் கொப்பளிக்கும் விதமாக எரிந்தன. மின்சார வயர்கள் வெடித்து சிதறின. இந்த விபத்து குறித்து அறிந்த கொரோனா நோயாளிகள் பலர் அங்கிருந்து தப்பிக்க மாடிகளிலிருந்து குதித்தனர்.
பலி
இப்படி மாடிகளில் இருந்து குதித்தும் தீ விபத்தில் காயமடைந்தும் இதுவரை 9 பேர் பலியாகிவிட்டனர். இந்த விபத்தில் பலர் காயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் உயிர் பலி மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்திற்கு பிறகு பலர் மூச்சுவிட முடியாமல் மயங்கி விழுந்தனர்.
அச்சம் தரும் நிலை
இன்னும் பலர் ஹோட்டலின் மறுபுறத்தில் உள்ள அறைகளின் பால்கனிகளில் வந்து குவிந்தனர். நிற்கவும் முடியாமல் குதிக்கவும் முடியாமல் அவர்கள் நின்றிருந்த காட்சி பரிதாபத்தை வரவழைக்கிறது. ஹோட்டலில் இருந்தால் தீயில் கருகிவிடுவோம் என்ற அச்சம் கீழே குதித்தால் மற்றவர்கள் போல் பலியாகிவிடுவோமோ என்ற அச்சம் அவர்களின் கண்களில் தெரிந்தது. அதே நேரத்தில் எப்படி தப்பிப்பது, யார் காப்பாற்றுவார்கள் என்ற தவிப்பும் அவர்களின் கண்களை விட்டு அகலவில்லை.