பார்களை திறக்க ரூ1 கோடி லஞ்சம்: கேரளா நிதி அமைச்சர் கே.எம். மானி மீது விசாரணை நடத்த கோர்ட் உத்தரவு!
திருவனந்தபுரம்: கேரளாவில் மூடப்பட்ட பார்களைத் திறக்க ரூ.1 கோடி லஞ்சம் வாங்கியதாக நிதி அமைச்சர் கே.எம். மானிக்கு எதிரான புகாருக்கு முகாந்திரம் இருப்பதால் அவர் மீது தொடர்ந்து விசாரணை நடத்த திருவனந்தபுரம் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் மதுவிலக்கை அமல்படுத்தும் வகையில் படிப்படியாக பார்களையும் கடைகளையும் அம்மாநில அரசு மூடியது. இந்த நிலையில் மூடப்பட்ட மதுபார்களை திறக்கிறேன் என உறுதி அளித்து பார் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பிஜூ ரமேஷிடம் ரூ1 கோடி லஞ்சம் வாங்கினார் நிதி அமைச்சர் கே.எம். மானி என்பது புகார்.

இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மானி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அத்துடன் இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது.
கடந்த ஜூன்மாதம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில்லை எனவும் முடிவு செய்திருந்தனர். இதை எதிர்த்து திருவனந்தபுரம் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட்னா.
இவற்றை விசாரித்த நீதிமன்றம், நிதி அமைச்சர் கே.எம். மானிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதால் அவர் மீது தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications