கால்வாயில் வீசப்பட்ட இவிஎம் இயந்திரம்.. மேற்கு வங்கத்தில் கலவரம்.. கடைசி கட்ட தேர்தலில் அதிர்ச்சி!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் இறுதிக்கட்டமாக 9 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று நடக்கும் நிலையில், ஒரு வாக்குச்சாவடி மையத்தில் வன்முறை வெடித்துள்ளது. இதில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சிலர் கால்வாயில் வீசியுள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று இறுதி கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்து, வரும் ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 13 தொகுதிகள், உத்தர பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 9, பீகாரில் 8, ஒடிசாவில் 6, இமாச்சல பிரதேசத்தில் 4, ஜார்க்கண்டில் 3 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இறுதி கட்டமாக நடக்கும் 57 தொகுதியில் மொத்தம் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 10.02 கோடி வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர்.
மேற்கு வங்கத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று 9 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. டம் டம், பராசத், பாசிர்ஹாட், ஜெய்நகர், மதுராபூர், டயமண்ட் ஹார்பர், ஜாதவ்பூர், கொல்கத்தா தக்ஷின் மற்றும் உத்தர் கொல்கத்தா ஆகிய 9 தொகுதிகளில் இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 9 லோக்சபா தொகுதிகளிலும் சேர்த்து மொத்தமாக 124 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, சிட்டிங் எம்.பி.க்கள் சுதிப் பந்தோபாத்யாய், சவுகதா ராய், மாலா ராய், பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் தேபஸ்ரீ சவுத்ரி, சிபிஐ (எம்) மூத்த தலைவர் சுஜன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பல முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கொல்கத்தாவில் இன்று 17,470 வாக்குச் சாவடிகளில் மொத்தம் 1.63 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள ஜாதவ்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் வன்முறை ஏற்பட்டுள்ளது.
பங்கர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி 40, 41ல் வாக்குப்பதிவு இயந்திரத்தை சிலர் அப்பகுதியில் உள்ள ஒரு கால்வாயில் வீசியுள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள், இந்திய மதச்சார்பற்ற முன்னணி (ISF) ஆதரவாளர்கள் அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், வாக்குச்சாவடியை அடித்து நொறுக்கி, வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி அருகே உள்ள கால்வாயில் வீசியதாக தகவல் கிடைத்துள்ளது.
கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். அப்பகுதியில் இருந்து சில வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவிஎம் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் கால்வாய் தண்ணீரில் வீசப்பட்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
"இந்தச் சம்பவத்தால் வாக்குப்பதிவு பாதிக்கப்படவில்லை. இருப்பு வைக்கப்பட்டிருந்த ரிசர்வ் இஎவிஎம் இயந்திரங்கள் தான் தண்ணீரில் வீசப்பட்டன. பயன்பாட்டில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு சேதம் இல்லை. தலைமை அதிகாரியிடம் இருந்து அறிக்கை கேட்டுள்ளோம்" என தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications