வியாபம் ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட ம.பி. முதல்வர்… ராஜினாமா செய்ய மாட்டாராம்!
போபால்: வியாபம் மோசடி தொடர்பாக எதிர்கட்சிகள் கொடுத்த கடும் அழுத்தங்களுக்கும், விமர்சனங்களுக்குப் பிறகு, மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வேறு வழியின்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால் எதிர்கட்சிகள் வற்புறுத்துவது போல தான் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார் சவுகான்.
மத்தியப் பிரதேசத்தில் பல்வேறு நுழைவுத் தேர்வுகளை நடத்தும் மத்தியப் பிரதேச தொழில்கல்வி வாரியத்தில் (வியாபம்) கடந்த 2004ம் ஆண்டு முதல் நுழைவுத் தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த மெகா மோசடியில் தொடர்புடைய பலர் மர்மமான முறையில் இறந்தனர்.
வியாபம் முறைகேட்டில் தொடர்புடைய இளம்பெண் ஒருவர் ரயில்வே பாதை அருகே மர்மமான முறையில் கடந்த 2012-ம் ஆண்டு உயிரிழந்து கிடந்தார். அப்பெண்ணின் பெற்றோரிடம் 3 நாட்களுக்கு முன் பேட்டியெடுத்துக் கொண்டிருக்கும்போதே நிருபர் அக்ஷய் சிங் திடீரென வாயில் நுரைதள்ளி இறந்தார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மறுநாளே மருத்துவக் கல்லூரி டீன் அருண் சர்மா உயிரிழந்தார்.
47 மர்ம மரணங்கள்
மாநில ஆளுநர் ராம் நரேஷ் யாதவின் மகன் சைலேஷ் யாதவ் உள்பட இந்த மோசடியில் தொடர்புடைய பலர் மர்மமான முறையில் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுவரை 47 பேர் இவ்வாறு இறந்துள்ளனர்.
எதிர்கட்சிகள் கொதிப்பு
இந்த மெகா மோசடி குறித்தும், மர்ம மரணங்கள் குறித்தும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஜபல்பூர் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால், சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட முடியாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பதவி விலகவேண்டும்
வியாபம் மர்ம மரணங்களுக்குப் பொறுப்பேற்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பதவி விலக வேண்டும் என்றும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியது. மாநிலம் முழுவதும் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தவும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
சி.பி.ஐ விசாரணை தேவை
இந்த நிலையில் தலைநகர் போபாலில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், சில துரதிர்ஷ்டமான மரணங்களுக்குப் பிறகு மக்கள் மனதில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. கேள்விகளுக்கு நியாயமான விடை கிடைக்க வேண்டும். நான் இந்த விவகாரம் குறித்து இரவு முழுதும் சிந்தித்தேன், எழுப்பப்படும் கேள்விகளுக்கு விடைகள் தேவை. எனவே தற்போது சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றார்.
அகால மரணங்கள்
ஜனநாயக நாட்டில் மக்களின் கருத்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அவர்களுடைய உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். அந்த வகையில் மக்களின் கோரிக்கை மற்றும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வியாபம் மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றும் சவுகான் தெரிவித்தார். சிபிஐ விசாரணையில் வியாபம் தொடர்பாக நிகழ்ந்த சில அகால மரணங்களும் அடங்குமா என்ற கேள்விக்கு, "அனைத்து விஷயங்களையும் சிபிஐ விசாரிக்கும்" என்றார்.
காங்கிரஸ் எதிர்ப்பு
இதனிடையே சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்வதாக முதல்வர் சவுகான் தெரிவித்ததை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்துள்ளது. இதுவும் உண்மையை மறைக்க செய்யும் முயற்சியே என்றும், உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை மட்டுமே நியாயம் வழங்கும் என்றும் காங்கிரஸ் தெரிவித்திருந்தது.
மவுனம் ஏன்?
லலித் மோடி விவகாரம், வியாபம் மோசடி உள்ளிட்டவற்றில் பாஜக மவுனம் காப்பது, மக்களை அவமதிப்பதாக உள்ளது என்று காங்கிரஸ் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மூத்த தலைவர் மனீஷ் திவாரி, இந்த விவகாரங்களில் பாஜக ஏன் மவுனமாக உள்ளது. மக்களையும், ஊடகங்களையும் எந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.
உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில்
வியாபம் மோசடி ஒருபுறம் என்றால், அதில் தொடர்புடையவர்கள் மர்மமான முறையில் இறப்பது மறுபுறம் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும். அதற்கு உடனடியாக உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனீஷ் திவாரி கூறினார்.
உச்சநீதிமன்றத்தில் விசாரணை
இதனிடையே, மத்தியப் பிரதேசத்தின் வியாபம் ஊழல் விவகாரத்தை சிபிஐ விசாரிக்கக் கோரும் திக்விஜய் சிங் உள்ளிட்டோரின் மனுக்களை ஏற்ற உச்ச நீதிமன்றம், இது தொடர்பான விசாரணை வரும் 9ம் தேதி (நாளை) நடைபெறும் என்று அறிவித்துள்ளது.