திடீரென மாறிய முடிவு.. நந்திகிராமில் மமதா 1622 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி.. சுவேண்டு வெற்றி!
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் மமதா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் கடும் போட்டிக்கு பின் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் முதலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 1622 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சுவேண்டு அதிகாரியிடம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார். நியூஸ் 18 சேனல் வெளியிட்ட புதிய செய்தியில் மமதா தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
மேற்கு வங்க சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை இங்கு நடந்த வாக்கு எண்ணிக்கையில் திரிணாமுல் காங்கிரஸ் 212 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, பாஜக 76 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
மேற்கு வங்க தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கணிப்புகளை காலி செய்து மமதா பானர்ஜி மாபெரும் வெற்றியை நோக்கி நடைபோட்டுக்கொண்டு இருக்கிறார்.

நந்திகிராம்
மேற்கு வங்கத்தில் நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் மமதா பானர்ஜி போட்டியிட்டார். இவரை எதிர்த்து முன்னாள் திரிணாமுல் உறுப்பினரும், மமதாவின் நெருங்கிய நண்பருமான சுவேண்டு அதிகாரி போட்டியிட்டார். பாஜக சார்பாக இவர் களமிறக்கப்பட்டார்.

பாஜக
தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன் சுவேண்டு அதிகாரி குடும்பத்தை சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். ஒரு காலத்தில் திரிணாமுல் காங்கிரசில் அதிக அதிகாரம் மிக்க குடும்பமாக அதிகாரியின் குடும்பம் இருந்தது.

அதிகாரி குடும்பம்
இப்படிப்பட்ட அதிகாரி குடும்பம் பாஜகவிற்கு தாவியது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. அதோடு மமதாவிற்கு எதிராக நந்திகிராம் தொகுதியில் சுவேண்டு களமிறக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று காலையில் இருந்து மமதா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் பின்னடைவை சந்தித்தார். காலையில் 8000 - 9000 வாக்குகள் கூட மமதா பின்னடைவில் இருந்தார்.

பின்னடைவு
இந்த நிலையில் தற்போது சுவேண்டு அதிகாரியை பின்னுக்கு தள்ளி மமதா பானர்ஜி முன்னிலை பெற்றார். 2700 வாக்குகள் வித்தியாசத்தில் மமதா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் முன்னிலை பெற்றார். ஆனால் சில நிமிடங்களில் மீண்டும் அதிகாரி முன்னிலை பெற்றார். 6 வாக்குகள் வித்தியாசத்தில் அதிகாரி முன்னிலை வகித்தார்.

வெற்றி
இதனால் மமதா எங்கே தோற்றுவிடுவாரோ என்று கருதப்பட்ட நிலையில் கடைசி சுற்றில் 1200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் தற்போது திடீர் திருப்பமாக 1622 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சுவேண்டு அதிகாரியிடம் மமதா தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார். மமதா முதலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது திடீரென தோல்வி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications