என்னை சட்டசபைக்குள் நுழையவிடாமல் கதவுகளை இழுத்து மூடுறாங்க..மமதா அரசு மீது மே.வங்க ஆளுநர் பாய்ச்சல்
கொல்கத்தா: தம்மை சட்டசபைக்குள் நுழையவிடாமல் கதவுகளை இழுத்து மூடுவதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அரசு மீது அம்மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கார் குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஆளுநர் தன்காருக்கும் முதல்வர் மமதா பானர்ஜிக்கும் இடையே அதிகாரம் மோதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திடீரென மேற்கு வங்க சட்டசபைக்கு ஆளுநர் தன்கர் சென்றார்.

அப்போது கேட் எண் 3 இழுத்து மூடப்பட்டிருந்தது. சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதால் அந்த கேட் எண்- 3 மூடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இதனையடுத்து பத்திரிகையாளர்கள் செல்லும் கேட் எண் 4-ன் வழியாக சட்டசபைக்குள் சென்றார் ஆளுநர் தன்கார். முன்னதாக தாம் சட்டசபைக்கு வருவதாகவும் அங்குள்ள ஏற்பாடுகளை ஆராய வேண்டும் என்றும் நூலகத்தை பார்வையிட வேண்டும் என்றும் சபாநாயகர் பீமன் பானர்ஜிக்கு ஆளுநர் தன்கார் கடிதம் அனுப்பியிருந்தார்.
பின்னர் சட்டசபை கூட்டம் திடீரென டிசம்பர் 5-ந் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில்தான் சட்டசபைக்கு திடீரென ஆளுநர் தன்கார் சென்ற போது இந்த களேபரம் நடந்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தன்கார், நான் ஏற்கனவே தகவல் அனுப்பியிருந்தேன். அப்படியிருந்தும் ஆளுநருக்கான கேட் எண் 3- ஏன் இழுத்து மூடப்பட்டது. சட்டசபை ஒத்திவைக்கப்பட்டதாலேயே கேட் எண் 3ஐ மூட வேண்டும் என்பது இல்லை.
இது நாட்டின் ஜனநாயக வரலாற்றில் அவமானகரமான ஒன்று என சாடினார்.












Click it and Unblock the Notifications