”மதக்கலவரத்தை தூண்டலாம்” - மேற்கு வங்கத்தில் நுழைய பிரவீன் தொகாடியாவுக்கு இன்று முதல் தடை
கொல்கத்தா: விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா மேற்கு வங்காளத்துக்குள் நுழைய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
மேற்குவங்க மாநிலத்தின் பிர்பம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா நடத்திய பேரணிக்கு பின், மதமாற்ற நிகழ்ச்சியை நடத்திய விஸ்வ இந்து பரிஷத், கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதத்தை தழுவிய 20 நபர்களை மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றியது.

மேலும், அந்த நிகழ்ச்சியில் ஆத்திரமூட்டும் வகையில் பேசியதாக தொகாடியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், வருகின்ற ஏப்ரல் 5 ஆம் தேதி மேற்குவங்க மாநிலத்தின் வடக்கு டின்ஜாபூர் மாவட்டத்தில் ராய்கஞ்ச்சில் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியாவின் பேரணி நடைபெற உள்ளது.
இதையடுத்து, மேற்குவங்க மாநிலத்திற்குள் இன்று முதல் தொகாடியா நுழைவதற்கு தடை விதிக்கப்படுவதாகவும், தடையை மீறி அவர் நுழைந்தால் உடனடியாக கைது செய்யப்படுவார் என்றும் மேற்கு வங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், தொகாடியா தங்கள் மாநிலத்திற்குள் வந்தால் மாநிலத்தில் மதக்கலவரம் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என மேற்கு வங்க உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
கர்நாடகா, அசாம் மற்றும் ஒடிசாவை தொடர்ந்து தற்போது மேற்கு வங்காளத்துக்குள் நுழைய விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications