கொல்கத்தா அன்று இரவு நடந்தது என்ன?.. சஞ்சய் ராய் நண்பன் ஷாக் தகவல்
கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய் 'அந்நியன்' படம் விக்ரம் போல டிவிஸ்ட் அடித்துக் கொண்டிருக்கிறான். முதலில், 'ஆம் நான் தான் செய்தேன்' என்று பேசியவன் பிறகு நீதிபதியிடம், 'நான் அப்பாவி' என்று கூறினான். சஞ்சய் நீதிபதியிடம் கூறியதற்கு நேர்மாறான ஒரு தகவல் அவனின் நண்பர் மூலம் வெளிவந்துள்ளது.
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. அதேநேரத்தில் வழக்கு குறித்தும் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

முக்கியமாக கைது செய்யப்பட்டுள்ள, வழக்கின் முக்கிய குற்றவாளி என்று கருதப்படும் சஞ்சய் ராயின் நடவடிக்கை சிபிஐ அதிகாரிகளையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்பவம் நடந்த அடுத்த நாளே சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டான். அப்போது முதலே சஞ்சய் மிகவும் ஆணவத்துடன் பேசி அதிகாரிகளை அதிரவைத்தான். "ஆம் நான்தான கொலை செய்தேன். என்னை தூக்கில் போடுங்கள்." என்று ஆணவத்துடன் கூறியிருந்தான்.
அவன் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்தன. அவன் பாலியல் கொடூரன் என்றும் போலீஸார் கூறினர். வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாறியதும் திருப்பங்கள் நடந்தன. சஞ்சய் தொடக்கத்தில் சிபிஐ அதிகாரிகளிடமும் குற்ற உணர்வு இல்லாமல் பேசியுள்ளான். "அவனுக்கு மிருக குணம். அவன் மனதில் கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லை. நாங்கள் கேட்டவுடன் கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் நடந்த சம்பவத்தை எந்த இடைவெளியும் இல்லாமல் கூறினார்." என்று சிபிஐ அதிகாரிகள் ஆச்சரியத்துடன் கூறியிருந்தனர்.
ஆனால், அதே சஞ்சய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அப்படியே டிவிஸ்ட் அடித்தான். "நான் அப்பாவி. இந்த வழக்கில் என்னை வம்படியாக சேர்த்துள்ளனர். எனக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது." என்று நீதிபதி முன்பு கண்ணீர் வடித்தான். அதேபோல, சிறை ஜெயிலரிடமும், "நான் ஒரு அப்பாவி." என்று கூறியிருக்கிறான்.
இந்நிலையில், சஞ்சயுடன் பணியாற்றிய நண்பன் பல முக்கிய தகவல்களை கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர், "ஆர்.ஜி கர் மருத்துவமனைக்கு ஆகஸ்ட் 8ஆம் தேதி மதியம் 1.30 மணியளவுக்கு சென்றோம். அங்கு என்னுயை சகோதரர் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கிருந்து நாங்கள் சோனாகாச்சி பகுதிக்கு சென்றோம். பிறகு செட்லா பகுதியில் இருவரும் மது அருந்தினோம்.
அதிகாலை 3 மணி அளவில் மீண்டும் ஆர்.ஜி கர் மருத்துவமனைக்கு அருகே சென்றோம். சஞ்சயை வேலைக்காக ஒதுக்கப்பட்டிருந்த குடியிருப்புக்கு வரும்படி சொன்னேன். ஆனால் அவன் திரும்பவில்லை. நான் மட்டுமே தனியாக குடியிருப்புக்கு சென்றேன். சஞ்சய் மருத்துவமனைக்கு சென்றுவிட்டான்.
ஆகஸ்ட் 9ஆம் தேதி நாங்கள் மீண்டும் ஆர்.ஜி கர் மருத்துவமனைக்கு சென்று என் சகோதரனை பார்ப்பதாக திட்டமிட்டிருந்தோம். அவன் மருத்துவமனை வருவதற்கு ஆர்வம் காட்டவில்லை. காலை 10 மணியளவில் இருந்து நான் அவனை எழுப்புவதற்கு முயற்சி செய்தேன். நண்பகல் 12.10 மணியளவில் சஞ்சய் செல்போனில் என் அழைப்பை எடுத்தான். அப்போதும் கூட அவன் மருத்துவமனைக்கு செல்வதை தவிர்ப்பதிலேயே குறியாக இருந்தான்.
நான் அவனிடம் மருத்துவமனையில் நடந்த சம்பவம் குறித்து அதிர்ச்சியுடன் பகிர்ந்தேன். அவன் அதை மிகவும் சஜகமாக கேட்டு மகிழ்ச்சியாகவே இருந்தான். மதியம் 2.30 மணியளவில் அவன் மீண்டும் மது அருந்தினான்." என்று கூறியுள்ளார். அவரிடம் சிபிஐ அதிகாரிகளும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications