"ஆடாம ஜெயிச்சோமடா.." தொங்கு சட்டசபை அமைந்தால் காங்கிரஸுக்கு அடிக்கும் ஜாக்பாட்! ஏன் தெரியுமா
கொல்கத்தா: மேற்கு வங்கத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் சாதகமான அரசியல் அலை வீசவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க அரசியலைப் பொறுத்தவரை அங்கு ஒரு இழுபறியான சூழலே இருப்பதாக பெரும்பாலான தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அங்கு ஆட்சியை அமைக்க 148 இடங்களில் வெல்ல வேண்டிய சூழலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் என்றால் என்ன நடக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
மேற்கு வங்கத்தில் மம்தாவின் கோட்டையைத் தகர்க்கப் பாஜகவும், தனது ஆட்சியைத் தக்கவைக்கத் திரிணாமுல் காங்கிரஸும் நடத்திய வாழ்வா சாவா போராட்டம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இப்போது ஒட்டுமொத்த தேசத்தின் பார்வையும் மே 4 வாக்கு எண்ணிக்கையை நோக்கித் திரும்பியுள்ளது.

மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்கள் 148. ஆனால், பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் இந்த எண்ணைத் தொடுவதில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் இழுபறி நிலவுவதைக் காட்டுகின்றன. மேட்ரைஸ் கணிப்பின்படி பாஜக 146 முதல் 161 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் 125 முதல் 140 இடங்களைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பாஜக 146 இடங்களில் நின்றால், அது தொங்கு சட்டமன்ற நிலையை உருவாக்கும்.
சர்வே
பீப்பிள்ஸ் பல்ஸ் (Peoples Pulse) சர்வேயில் இரு கட்சிகளுமே வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தொங்கு சட்டசபை உருவாகவும் வாய்ப்பு இருப்பது போலவே அதிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி கருத்துக்கணிப்பு நிறுவனமான 'ஆக்சிஸ் மை இந்தியா', இந்த முறை மேற்கு வங்க எக்சிட் போல் முடிவுகளை வெளியிட மறுத்துவிட்டது. இதற்குக் காரணமாக அவர்கள் சொல்வது, "பெரிய அளவிலான வாக்காளர்கள் தங்களின் விருப்பத்தை வெளிப்படையாகத் தெரிவிக்க மறுத்துவிட்டனர்" என்பதுதான். இந்த மௌனம் யாருக்குச் சாதகமாகப் போகிறது என்பதுதான் தற்போதைய பெரிய கேள்விக்குறி.
ஏன் சிக்கல்
தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக வலிமையான கூட்டணியுடன் களமிறங்கியது. இதனால் திமுக, அதிமுகவால் தனித்து பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வெல்ல முடியவில்லை என்றால் அவர்கள் கூட்டணியில் இருக்கும் கட்சியே ஆதரவு கொடுக்க வாய்ப்புகள் அதிகம். அதேநேரம் ஆதரவு மட்டும் தருவார்களா இல்லை ஆட்சியில் பங்கு எடுப்பார்களா என்பது கேள்விக்குறி! ஏனென்றால் தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைந்ததே இல்லை. ஆனால், இந்த முறை என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம்.
ஆனால், மேற்கு வங்கத்தில் அப்படி இல்லை. திரிணாமுல், பாஜக இரு கட்சிகளுமே தனித்து போட்டியிட்டது. இதனால் எந்தவொரு தனிப்பட்ட கட்சியும் 148 இடங்களைத் தாண்டாவிட்டால், மேற்கு வங்கம் ஒரு அரசியல் குழப்பத்திற்குள் தள்ளப்படும். வெறும் ஓரிரு இடங்களில் வென்றாலும் கூட சிறு கட்சிகள் நிலைப்பாடு முக்கியமானதாக மாறிவிடும்.
என்ன நடக்கும்
பொதுவாக இதுபோல தொங்கு சட்டசபை அமையும்போது, ஆளுநர் முதலில் மிகப் பெரிய கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பார்கள். யாருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், இரு பெரிய கட்சிகளும் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவை நாடும்.
குறிப்பாக இதுபோன்ற சூழல்களில் காங்கிரஸ் - இடதுசாரிகள் கிங் மேக்கராக மாறலாம்.. அவர்கள் ஓரிரு தொகுதிகளில் மட்டுமே வென்றாலும் கூட தொங்கு சட்டசபை அமைந்தால் அவர்கள் தேவை பல மடங்கு அதிகரிக்கும். அதேநேரம் இது மறைமுகமாக திரிணாமுல் காங்கிரஸுக்கே ஆதரவாக இருக்கும். காங்கிரஸ், திரிணாமுல் என இரு கட்சிகளுமே நிச்சயம் பாஜகவுடன் கூட்டணி அமைக்காது என்பதால் அமைச்சரவையில் கூடுதல் இடங்களைக் கேட்டு வாங்கிவிட்டு திரிணாமுல் காங்கிரஸுக்கு ஆதரவு தரவே வாய்ப்புகள் அதிகம்!












Click it and Unblock the Notifications