"பிளையிங் கிஸ்.." பாஜக அலுவலகத்தை பார்த்து முத்தம் கொடுத்த ராகுல் காந்தி.. பாத யாத்திரையில் அதகளம்
ஜெய்பூர்: ராகுல் காந்தியின் பாத யாத்திரை இப்போது ராஜஸ்தான் மாநிலத்தை அடைந்துள்ள நிலையில், அங்கு பாஜக அலுவலகத்தை ராகுல் கடந்து சென்ற வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
காங்கிரஸின் ராகுல் காந்தி இப்போது ஒற்றுமை யாத்திரையில் மும்முரமாக உள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பாத யாத்திரை காஷ்மீரில் சென்று முடிவடைகிறது.
ராகுல் காந்தி இந்த பாத யாத்திரை மீதும் தீவிர கவனம் செலுத்துகிறார். இதன் காரணமாகவே இமாச்சல பிரதேச தேர்தல் பிரசாரத்தில் கூட அவர் ஈடுபடவில்லை. குஜராத்திலும் ஓரிரு நாட்கள் மட்டுமே அவர் பிரசாரம் செய்தார்.
சினிமாவை மிஞ்சும் பதற்றம்.. தாக்கிய பாஜகவினர் - எங்க எம்எல்ஏவை காணோம்! பகீர் கிளப்பிய ராகுல் காந்தி
ராகுல் காந்தி
அதை விட ராகுல் காந்தி இந்த ஒற்றுமை யாத்திரையை முக்கியமானதாகப் பார்க்கிறார். நாடு முழுவதும் உள்ள மக்களைக் காந்தி இந்த பாத யாத்திரையைத் தொடங்கி உள்ளதாகக் காங்கிரஸ் கூறுகிறது. இதுவரை காங்கிரஸ் இவ்வளவு பெரிய பாத யாத்திரையை நடத்தியதே இல்லை. 150 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த பாத யாத்திரைக்கு, மக்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுப்பதாகக் காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர்.. குறிப்பாகக் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் ராகுல் காந்திக்கு மிகப் பெரியளவில் வரவேற்பு இருந்தது.
பாத யாத்திரை
இப்போது ராகுல் காந்தியின் பாத யாத்திரை காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது. அங்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் தொண்டர்கள், ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் கலந்து கொண்டு வருகின்றனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா, முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், பல அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் இந்த பாத யாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர்.
பிளையிங் கிஸ்
இதற்கிடையே ராஜஸ்தானில் பாத யாத்திரை செல்லும் போது அங்கு சுவாரசிய நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை காலையில் ராஜஸ்தான் ஜாலவர் பகுதியில் ராகுல் காந்தி தனது பாத யாத்திரையைத் தொடங்கினார். அங்கு அதிகப்படியான காங்கிரஸ் கட்சியினர் திரண்டு அவருக்கு வரவேற்பு கொடுத்தனர் குறிப்பாக ஜாலவர் அலுவலகத்தின் கூரையிலும் கூட நின்று ராகுல் காந்தி பாத யாத்திரைக்கு ஆதரவு கொடுத்தனர். இதைப் பார்த்த ராகுல் காந்தி சட்டென அவர்களுக்கு பிளையிங் கிஸ் கொடுத்தவாறே தனது பாத யாத்திரையைத் தொடர்ந்தார்.
பாஜக அலுவலகம்
இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் ராகுல் காந்தி பாத யாத்திரை சென்று கொண்டிருக்கிறார். அப்போது அங்கு அவரது வலதுபுறத்தில் இருக்கும் பாஜக அலுவலகத்தின் மாடியில் சிலர் நின்று கொண்டு இருக்கின்றனர். அந்த பாஜக அலுவலகத்தின் முன்பு, பிரதமர் மோடி, நட்டா படங்களுடன் கூடிய பேனர்களும் வைக்கப்பட்டு இருந்தது. அந்த அலுவலகத்தைக் கடந்து செல்லும் போது, அங்கு மாடியில் நின்று கொண்டிருந்தவர்களைப் பார்த்து ராகுல் காந்தி கையசைத்தவாறே பிளையிங் கிஸ் கொடுத்துவிட்டு தனது பாக யாத்திரையைத் தொடர்ந்தார்.
ஆதரவு
இன்று மட்டும் சுமார் 12 கிமீ ராகுல் காந்தி தனது பாத யாத்திரையில் நடக்க உள்ளார். மதியம் உணவுக்குப் பிறகு, பிற்பகல் 3.30 மணிக்கு சுகேட்டில் இருந்து மீண்டும் பாத யாத்திரை தொடங்குகிறது. அங்குள்ள மோரு கலன் கேல் மைதானத்தில் இரவு தங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் இந்தப் பயணத்திற்குப் பொதுமக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும், பல்வேறு திரை பிரபலங்கள், சமூக ஆர்வலர்களும் பாத யாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர்.
குழப்பம் முடியவில்லை
ராகுல் காந்தியின் இந்த பாத யாத்திரைக்கு ராஜஸ்தான் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தாலும் கூட இன்னும் அங்குக் காங்கிரஸில் நிலவும் உட்கட்சி குழப்பம் முடியவில்லை. அங்கு சச்சின் பைலட்டை முதல்வராக்க கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தது அனைவருக்கும் நினைவில் இருக்கும். இப்போது கூட சில நாட்களுக்கு முன்பு, சச்சின் பைலட்டிற்கு எதிராக அசோக் கெலாட் சில கடுமையான கருத்துகளைக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.