பர்த்டே பார்ட்டியில் வெடித்துச் சிதறிய ஹீலியம் பலூன்கள்: 2 குழந்தைகள் காயம்
பெங்களூர்: பெங்களூரில் 2 வயது குழந்தையின் பிறந்தநாள் பார்ட்டியின்போது ஹீலியம் பலூன்கள் வெடித்ததில் சிறுவன் மற்றும் சிறுமி என இரண்டு பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
பெங்களூர் மஹாதேவபுராவில் உள்ள பிரெஸ்டீஜ் சாந்திநிகேதன் அபார்ட்மென்ட்ஸில் வசித்து வருபவர் விபுல் ரெட்டி. அவர் தனது இரண்டு வயது மகளின் பிறந்தநாளை அண்மையில் மிகவும் விமரிசையாக கொண்டாடினார்.
பிறந்தநாள் பார்ட்டி அபார்ட்மென்ட் வளாகத்தில் உள்ள கிளப் ஹவுஸில் நடைபெற்றது. விபுல் 300 ஹீலியம் பலூன்களை வாங்கி பார்ட்டி நடந்த அறையில் பறக்க விட்டார். பலூன்கள் பார்ட்டி ஹாலின் சுவரில் ஒட்டிக் கொண்டிருந்தன.
அப்போது சூடான மின்சார பல்புக்கு அருகே இருந்த பலூன் வெடிக்க அதைத் தொடர்ந்து அங்கிருந்த பலூன்கள் வரிசையாக வெடிக்கத் துவங்கின. இதையடுத்து அந்த அறையில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
இந்த விபத்தில் விபுலின் உறவுக்கார சிறுவனும், அவரது மனைவியின் உறவுக்கார சிறுமியும் காயம் அடைந்தார். 10 வயதாகும் அவர்களின் தலைமுடி கருகியது, முகம், காது, கைகளில் தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரின் புருவங்கள் மற்றும் கண்முடி கூட லேசாக கருகியது.
பார்ட்டி நடந்த அறையில் இருந்த சேர்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த சம்பவத்தை பார்த்த குழந்தைகள் கதறி அழுதனர். தான் ஹீலியம் பலூன்கள் கேட்டபோதிலும் கடைக்காரர் ஹைட்ரஜன் பலூன்களை அளித்திருக்கக்கூடும் என்று சந்தேகித்த விபுல் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.