அப்படீன்னா, சுப்ரீம் கோர்ட் மாண்பை காக்காத கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு?
டெல்லி: ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக அவசர சட்டம் கொண்டுவர சட்டத்தில் இடமிருந்தும் அதை மத்திய அரசு செய்யவில்லை என்பதை பாஜகவே ஒப்புக்கொள்கிறது.
இதற்கு அவர்கள் முன்வைக்கும் காரணம் என்பது, உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகாமல் நிலுவையிலிருக்கும் ஒரு வழக்கில், மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிப்பது நீதிமன்ற மாண்பையும், மாட்சிமையையும் மீறும் செயல் என்பதுதான்.
இதை பொன்.ராதாகிருஷ்ணன் முதல் வானதி ஸ்ரீநிவாசன் வரை அனைத்து மட்ட பாஜகவினரும் திரும்ப திரும்ப கூறிவருகிறார்கள்.

எங்களுக்கே அதிகாரம்
ஆனால் இதே பாஜக அரசு, உச்சநீதிமன்றத்தை பார்த்தே, "உங்களுக்கு இதில் அதிகாரம் இல்லை" என கோபத்தை கக்கிய சம்பவம் உங்களில் பலருக்கும் மறந்திருக்காது. ஆம். காவிரி பிரச்சினையின்போதுதான் இந்த எதிர் வாதத்தை மத்திய அரசின் வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் உதிர்த்தார்.

அறச்சீற்றம்
காவிரி மேலாண்மை வாரியத்தை நான்கே நாட்களில் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை, எதிர்த்துதான் இப்படி அறச்சீற்றம் காட்டியது மத்திய அரசு. இதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் உத்தரவை தளர்த்தியது உச்சநீதிமன்றம். இதில் கவனிக்க வேண்டியது, இந்த விஷயத்திலும் பாதிக்கப்பட்டது தமிழகம்தான். அத்தோடுவிட்டதா.. கர்நாடகா தமிழகத்திற்கு இத்தனை கன அடி தண்ணீரை திறக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த பல உத்தரவுகள் மீறப்படும்போதெல்லாம் அமைதிகாத்தது இதே மத்திய அரசுதான். அப்போது சுப்ரீம் கோர்ட் மாட்சிமை ஆட்சியாளர்கள் கண்களுக்கு தென்படவில்லை.

ஒப்புதல் இல்லை
இதே மத்திய அரசுதான், தற்போது ஜல்லிக்கட்டு விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் மாட்சிமை பற்றி பேசுகிறது. இதிலும் பாதிக்கப்படுவது தமிழகம்தான். சட்டத்தில் வழியிருந்தும் அவசர சட்டம் கொண்டுவராமல் இருப்பதை பார்க்கும்போது மத்திய அரசுக்கு ஜல்லிக்கட்டு நடப்பதில் மகிழ்ச்சி இல்லை என்பது தெளிவாகிறது.

நெருக்கடி அவசியம்
ஒருவேளை சுப்ரீம்கோர்ட் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து தீர்ப்பளித்தால், அப்போது தீர்ப்பு வந்துவிட்டதால் இனி எதுவும் செய்ய முடியாது என்று சொன்னாலும் சொல்வார்கள் மத்தியில் ஆளும் கட்சியினர். இந்த இடத்தில்தான் மக்கள் கொந்தளிப்பு அவசியப்படுகிறது. மக்கள் நெருக்கடிதான் சட்டத்தை உருவாக்குபவர்களை செயலாற்ற செய்யும்.

வாக்கு வங்கி அரசியல்
கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது. ஏற்கனவே வந்தும் உள்ளது. தமிழகத்தில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அதற்கான வாய்ப்பு தெரியவில்லை. எனவே ஒரு கண்ணில் வெண்ணையையும், மறுகண்ணில் சுண்ணாம்பையும் தடவியுள்ளது பாஜக. கச்சத்தீவு, இலங்கை பிரச்சினை, ஜல்லிக்கட்டு என தொடர்ந்து தேசிய கட்சிகள் இதே துரோகத்தை தமிழகத்திற்கு செய்து வருவதற்கு அடிப்படை காரணம் இதுதான். அந்த தொடர் புறக்கணிப்பின் அழுத்தம்தான் இப்போது இளைஞர்கள் மத்தியில் பீறிட்டு வெடிக்கிறது. தீர்வு இந்த இரண்டில் ஒன்றுதான்.. ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் அல்லது காவிரி மேலாண்மை வாரியம். இதில் எது உங்கள் சாய்ஸ் என மத்திய அரசை கேட்கிறார்கள் மக்கள்.












Click it and Unblock the Notifications