தமிழக அனைத்து கட்சியினரை சந்திப்பதைத் தடுக்கவே மத்திய அரசின் திடீர் ஆலோசனை கூட்டம்?
தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை சந்திக்க மறுக்கும் டெல்லி திடீரென காவிரி விவகாரத்தில் ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளது.
Recommended Video
சென்னை/டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்களின் ஆலோசனைக் கூட்டத்தை திடீரென மத்திய அரசு கூட்டியுள்ளது. தமிழக அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு வரும் நிலையில் இதைத் தவிர்க்கும் வகையில்தான் இந்த ஆலோசனைக் கூட்டத்தை டெல்லி கூட்டியுள்ளதா? என்ற சந்தேகமும் எழுப்பப்படுகிறது.
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் முன்னர் உத்தரவிட்ட போது மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என பிடிவாதம் காட்டியது மத்திய அரசு. தற்போது கர்நாடகா சட்டசபை தேர்தல் நெருங்குகிறது.
இந்நிலையில் 6 வாரங்களுக்குள் மேலாண்மை வாரியத்தை அமைத்தாக வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பை செயல்படுத்தும் வகையில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக அனைத்துக் கட்சிகள் ஒன்று கூடி தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
சந்திக்க தமிழக குழு முயற்சி
அத்துடன் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க அனைத்துக் கட்சி குழு முயற்சித்தது. டெல்லியிலும் சந்திக்க நேரம் கேட்கப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வமற்ற வகையில் டெல்லி கைவிரித்துவிட்டது என்றுதான் கூறப்படுகிறது.
கர்நாடகாவை மனதில் வைத்து..
இந்நிலையில் திடீரென 4 மாநில ஆலோசனைக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது. கர்நாடகாவில் தங்களுக்கு பாதகம் வந்துவிடக் கூடாது என்பதால் காவிரி பிரச்சனையில் டெல்லி தமிழகத்துக்கு எதிரான நிலைப்பாட்டையே கடைபிடித்து வருகிறது.
தவிர்க்கவே ஆலோசனை
தற்போது தமிழக அனைத்துக் கட்சிக் குழுவினரை பிரதமர் மோடி சந்தித்துவிட்டால் கர்நாடகாவிலும் எதிர்விளைவுகள் ஏற்படலாம் என கருதியே தவிர்த்து வருகிறது டெல்லி. இப்போது திடீரென 4 மாநில ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியிருப்பதும் இதைத் தவிர்க்கும் வகையில்தான் என சந்தேகிக்கப்படுகிறது.
தமிழக அரசு என்ன சொல்லும்?
அதுதான் மத்திய அரசு அழைத்திருக்கிறதே.. அப்போது போய் நாங்கள் மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்துவோம் என்கிற பல்லவியைத்தான் தமிழக அரசு தரப்பு பாடப் போகிறது. டெல்லியில் என்ன முடிவெடுத்தாலும் அது தமிழகத்துக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை என்பது தெரிந்த ஒன்று. ஆகையால் 4 மாநில ஆலோசனைக் கூட்டம் நிச்சயம் கண்துடைப்பாக அல்லது இன்னொரு பச்சை துரோகமாகத்தான் இருக்கப் போகிறது என்பதே தமிழர் அச்சம்.