ஆளுநரிடம் போராடியாச்சு.. பலனில்லை.. அடுத்து மோடி வீட்டுக்கு முன்பு தர்ணா.. அசோக் கெலாட் அதிரடி
ஜெய்ப்பூர்: தேவைப்பட்டால், பிரதமர் நரேந்திர மோடி வீட்டுக்கு வெளியே காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் இணைந்து தர்ணா நடத்த தயார் என்று, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூரில் உள்ள ஃபேர்மாண்ட் ஹோட்டலில் இன்று நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தின் போது, இதை அவர் கூறியுள்ளார்.
தேவைப்பட்டால் குடியரசு தலைவரை சந்திக்க செல்லவும் தயார் என்று அவர் கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையில் மோதல் உருவானது. எனவே துணை முதல்வர், காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டதுடன், சச்சின் பைலட் உள்பட 19 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார் சபாநாயகர்.

ஹைகோர்ட் உத்தரவு
இந்த நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை நாடினார் சச்சின் பைலட். இதை விசாரித்த ஹைகோர்ட் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

சட்டசபை
இருப்பினும், மொத்தம் 200 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபையில் தனக்கு போதிய பெரும்பான்மை பலம் இருப்பதால் சட்டசபையில் அதை நிரூபிக்க விரும்புவதாக அசோக் கெலாட் அறிவித்துள்ளார். இதையடுத்து, சட்டசபையை கூட்ட வேண்டும் என்று ராஜஸ்தான் ஆளுநர் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை சட்டசபையை கூட்டுவதற்கு ஆளுநர் அனுமதி வழங்கவில்லை.

ஹோட்டலில் எம்எல்ஏக்கள்
இந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு, குதிரை பேரம் நடந்துவிடக்கூடாது என்ற அச்சம் அசோக் கெலாட் தரப்புக்கு இருக்கிறது. எனவே, ஜெய்ப்பூரில் ஃபேர்மாண்ட் ஹோட்டலில் தனது ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்க வைத்துள்ளார் அசோக் கெலாட். அவர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது பிரதமர் இல்லத்திற்கு வெளியே போராட்டம் நடத்துவது பற்றி தெரிவித்துள்ளார்.

அடுத்து டெல்லி
சட்டசபையை உடனடியாக கூட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆளுநர் மாளிகையில், நேற்று அசோக் கெலாட் ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு வரை இந்த போராட்டம் நடைபெற்றது. இதன் பிறகு அவர்கள் கலைந்து சென்றனர். ஆனால் இந்த போராட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து அசோக் கெலாடுக்கு ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும் இதுவரை சட்டசபையை கூட்ட ஆளுநர் அனுமதி வழங்கவில்லை. எனவேதான் அடுத்து டெல்லிக்கு கிளம்ப வேண்டியதுதான் என பேசியுள்ளார் அசோக் கெலாட்.












Click it and Unblock the Notifications