ஆசாராம் பாபு வழக்கில் முக்கிய சாட்சி சுட்டுக்கொலை... 2 பேருக்கு வலைவீச்சு!
லக்னோ: சாமியார் ஆசாராம் பாபு வழக்கில் முக்கிய சாட்சியாக திகழ்ந்த அகில் குப்தா என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவர்களைப் பிடிக்க 3 தனிப்படைகளை போலீஸார் அமைத்துள்ளனர்.
சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக சாமியார் ஆசாராம் பாபு கடந்த 2013ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். ஆசாராம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதே, அவர் மீது வேறொரு பாலியல் பலாத்கார வழக்கும் தொடரப்பட்டது.

சிறுமியைப் பலாத்காரம் செய்த வழக்கில் முக்கிய சாட்சியாகக் கருதப்பட்டவர் அகில் குப்தா (35). இவர் பாபுவின் மடத்தில் சமையல் பணியாளராக பணி புரிந்தவர்.
இந்நிலையில், அகில் மர்மநபர்களால் நேற்று மாலை சுட்டுக் கொல்லப் பட்டார். அகில் கொலை தொடர்பாக உத்திரப்பிரதேச போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளனர்.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆசாராம் வழக்கின் முக்கிய சாட்சி கொல்லப்பட்ட வழக்கில் அடையாளம் தெரியாத இரண்டு பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் கண்டுபிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கொலை சம்பவம் ஆசாராம் வழக்கில் அகில் சாட்சியாக இருந்ததால் நடைபெற்றுள்ளதா இல்லை வேறு ஏதும் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications